திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் அருகே சாணார்பட்டியில் நடந்த கோயில் திருவிழாவில் புரவி எடுப்பு நடந்தது. சாணார்பட்டி மேட்டுக்கருப்பண சுவாமி கோயில் ஆண்டு ஆடி மாத உற்சவ விழா நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இதன் முக்கிய நிகழ்ச்சியான, புரவி எடுப்பதற்காக கருப்பண சுவாமி, குதிரை,யானை,காளை உள்ளிட்ட 300க்கும் மேற்ப்பட்ட சிலைகள் தயாரிக்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடந்தது.
விழாவின் துவக்கமாக நேற்று இரவு கிராமிய இசை நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்து சந்தனக்குடம் எடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து சுவாமி கண் திறப்பு மற்றும் சிறப்பு அபிஷேக,ஆராதனை நடந்தது. மாலை சாணார்பட்டி பேருந்து நிலையம் அருகே இருந்து புரவி கிளம்பி வீர சின்னம்பட்டி ரோடு, முஸ்லிம்தெரு,மாரியம்மன் கோயில் வழியாக அதிர்வேட்டு முழங்க 300அதிகமான சிலைகள் ஊர்வலமாக மேட்டுக்கருப்பண சுவாமி கோயிலுக்கு சென்றடைந்தது.
இதில் கோபால்பட்டி,ஆவிளிப்பட்டி,செட்டிநாயக்கன்பட்டி,மேட்டுக்கடை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்று சென்றனர்.இரவு 'வள்ளி திருமணம்' எனும் புராண நாடகம் நடக்கிறது.