வருகின்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் த.மா.கா. கூட்டணி தொடரும் - ஜிகே வாசன்

மதுரை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வட்டார, நகர, பேரூராட்சி தலைவர்கள் பங்கேற்ற அரசியல் மாநாடு மதுரை விரகனூரில் இன்று நடந்தது. இதில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- வருகின்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் எங்களது கூட்டணி தொடரும். அதற்கான களப்பணிகளின் தொடர்ச்சியாக இந்த மாநாடு அமையும். இவ்வாறு அவர் கூறினார். த.மா.கா.வின் அரசியல் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

டெல்லியில் சுதந்திர தின கொடியேற்று விழாவில் பேசிய பிரதமர் மோடி, திருவள்ளுவரின் “நீரின்றி அமையாது உலகு” என்ற வரிகளை மேற்கோள் காட்டியதற்கு பாராட்டு தெரிவிக்கிறது. நதிநீர் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும். ஜம்மு-காஷ்மீரின் 320-வது சட்டப்பிரிவு, 35-ஏ பிரிவையும் நீக்கி 2 யூனியன் பிரதேசங்களாக அறிவித்ததை த.மா.கா வரவேற்கிறது. உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற வேண்டும் என்று தமிழக முதல்வர் அறிவித்ததை வரவேற்கிறோம். உள்ளாட்சி தேர்தலை சந்திக்க கட்சி நிர்வாகிகள் இப்போது இருந்தே தயாராக வேண்டும். அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருகின்ற நீர் வரத்தில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக, பாலாற்றில் தடுப்பணை கட்டும் திட்டம், முல்லை பெரியாறு அணையை பொறுத்து ஏற்படுகின்ற பிரச்சினைகள், சுப்ரீம் கோர்ட்டு கூறிய பிறகும் தமிழகத்துக்கு தண்ணீர் விடுவதில் கர்நாடக அரசின் பிடிவாதம் இவற்றையெல்லாம் தீர்ப்பதற்கு மத்திய அரசோடு பேசி தென் மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தை மத்திய அரசின் தலைமையில் கூட்டி நிரந்தர தீர்வு காண தமிழக அரசு முயற்சிக்க வேண்டும். மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Previous Post Next Post