தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு திருப்பூரில் கைத்தறி கண்காட்சி

தேசிய கைத்தறி தினத்தினை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சார்பில்  கைத்தறி கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி துவக்கி வைத்தார்.  மேலும் அவர் பேசுகையில் இந்திய திருநாட்டில் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக உள்ள நெசவு தொழிலினை சிறப்பிக்கவும், வளர்ச்சியடைய செய்யவும் மத்திய அரசினால் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7 ஆம் நாளினை தேசிய கைத்தறி தினமாக பாரத பிரதமரால் அறிவிக்கப்பட்டு ஆண்டு தோறும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, 5 வது தேசிய கைத்தறி தின சிறப்பு கண்காட்சி இன்று (07.08.2019) அமைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் தமிழ்நாட்டில் புகழ்பெற்ற திருப்பூர்  மாவட்டத்திலுள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட மென்பட்டு சேலைகள், கோரா காட்டன் சேலைகள், கோரா சேலைகள், காட்டன் சேலைகள், பெட்சீட்டுகள், துண்டு வகைகள் மற்றும் மிதியடிகள் என கைத்தறி பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், இக்கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டுள்ள ஜவுளி ரகங்களுக்கு தமிழக அரசினால் 20 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படவுள்ளது. கைத்தறி பொருட்களை பயன்படுத்தி நெசவுத்தொழிலினை வளர்ச்சியடைய செய்ய வேண்டும் இவ்வாறு தெரிவித்தார். அதனை தொடர்ந்து 3 நெசவாளர்களுக்கு திறன் மிகு நெசவாளர் விருது மற்றும் சான்றிதழ்களையும், முத்ரா கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 4 நெசவாளர்களுக்கு தலா ரூ.50,000 வீதம் ரூ.2,00,000 மதிப்பிலான கடனுதவிகளையும் மற்றும் கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ் 10 நெசவாளர்களுக்கு ரூ.1,26,000 மதிப்பிலான நவீன ஜக்கார்டு இயந்திரங்களையும் வழங்கினார்.


Previous Post Next Post