10 கோரிக்கைகள் இந்து தமிழர் கட்சி சார்பில் அறநிலையத் துறை ஆணையரிடம் மனு

பழனி திருக்கோயில்கள் தொடர்பில் 10 கோரிக்கைகள் இந்து தமிழர் கட்சி சார்பில் அறநிலையத் துறை ஆணையரிடம் மனு

 


 

திருக்கோயில்கள் தொடர்பில் இந்து தமிழர் கட்சியின் சார்பில் பத்து கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்று இன்று அளிக்கப் பட்டது.

 

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி ஐஏஎஸ், பழனி திருக்கோயில் இணை ஆணையர் டாக்டர் ஜெயச்சந்திரா பானு ரெட்டி முன்னிலையில், ஆணையரிடம் இந்து தமிழர் கட்சியின் சார்பில் நிறுவனத் தலைவர் ராம ரவிக்குமார் தலைமையில் அக்கட்சியினர் மனு ஒன்றை அளித்தனர். அப்போது, மாநிலக் குழு உறுப்பினர்கள் பழனி எம் மனோஜ் குமார், கடலூர் என் ஆர் பரணிதரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

 

பழனி திருக்கோயில் மற்றும் பக்தர்கள் ஊழியர்கள் பழனி ஆண்டவர் கல்லூரி தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம்.. உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனு ஆணையரிடம் சமர்ப்பிக்கப் பட்டதாக ராம.ரவிக்குமார் தெரிவித்தார். மேலும், தங்களது கோரிக்கை மனுவை கனிவுடன் படித்து, நிச்சயமாக இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார் எனக் கூறினார் ராம ரவிக்குமார்.

 

இந்து தமிழர் கட்சியின் சார்பில் அளிக்கப் பட்ட மனுவில் கூறப் பட்டிருப்பதாவது.

 

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகம் சம்பந்தப்பட்ட திருக்கோயில், கல்லூரி, ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் அடிப்படை வசதிகள் குறித்தான கோரிக்கை ஆய்வு குறித்து அளிக்கப் பட்ட விவரம் 10 01 2020 அன்று பழனியில் தங்களை சந்தித்து கீழ்காணும் கோரிக்கை களை இந்து தமிழர் கட்சியின் சார்பில் முன்வைக்கிறோம்.

 

அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவிற்கு பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களை அழைக்க வேண்டுகிறோம்.மேலும் பழனி மலை குடமுழுக்கு சிறப்பு தபால் தலை வெளியிட மத்திய அரசை வலியுறுத்திடவும் வேண்டுகிறோம்.

 

பழனி மலை முருகன் திருக்கோயில் அமைந்துள்ள மலைக்கும், இடும்பன் சுவாமி அருள் பாலிக்கும் இடும்பன் மலைக்கும் இடையில் மெட்ரோ ரயில் பாலம் உயரமாக இருப்பது போல பழனி மலை- இடும்பன் மலை இணைப்பு பாலம்' உருவாக்கிடவும், இடும்பன் மலை மேம்பாட்டிற்கு ஒரு சிறப்பு செயல் திட்டத்தை உருவாக்கிட வேண்டுகிறோம் .

அவ்வாறு இணைப்பு பாலம் உருவாகும் பட்சத்தில் இடும்பன் மலை அதை சுற்றியுள்ள பகுதிகள் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு காரணமாக மேம்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

 

முக்கிய பிரமுகர்கள் தரிசனம் குறித்து விதிக்கப்பட்ட விதிமுறைகளை, சற்று தளர்த்தி உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் திருக்கோயில் நலனில் அக்கறை கொண்ட பெரியோர்கள் நலன்கள் பாதிக்காத வகையில் விதிமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டுகிறோம்.

 

பழனி மலை முருகன் சன்னிதானத்தில் மண்டபத்தின் உள்ளே வைக்கப்பட்டுள்ள காணிக்கை உண்டியல்கள் பக்தர்கள் கூட்டம் ,சாமி தரிசனம் முடித்து வெளிவருகின்ற பொழுது இட நெரிசல் ஏற்படுகிறது. இதை கவனத்தில் கொண்டு காணிக்கை செலுத்தக் கூடிய பக்தர்கள் எங்கிருந்தாலும் காணிக்கை செலுத்துவார்கள் . ஆகவே சன்னிதான மண்டபத்தின் உள்ளே இருக்கக்கூடிய உண்டியல் களை வெளிப்பிரகாரத்தில் இடமாற்றம் செய்ய வேண்டுகிறோம்.

 

பாதயாத்திரையாக வருகை தந்து ,படியேறி வந்து, பொது தரிசனத்தில் காத்து இருக்கக் கூடிய பக்தர்கள் காத்திருப்பு மண்டபத்தில் இருக்கின்ற பொழுது, அவர்களுக்கு பழச்சாறு அல்லது பால் வழங்கிட வேண்டுகிறோம். இது குறித்து கருணையோடு பரிசீலித்து உத்தரவிட வேண்டுகிறோம்.

 

ரோப் கார் காத்திருப்பு நிலையத்தில், காத்திருப்பு அறையில் உள்ளே பக்தர்களுக்கு கழிப்பிட வசதி உருவாக்கித் தர வேண்டுகிறோம்.

 

சபரிமலை சென்று யாத்திரையாக வரக்கூடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழநி ஆண்டவனை தரிசிக்க வருகிறார்கள். அவ்வாறு வரக்கூடிய பக்தர்களுக்கு திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் தரைதளத்தில் ஏதாவது ஒரு இடத்தில் 'உணவு சமைப்பதற்கான கூடம்' ஏற்படுத்தித் தரவேண்டும். அல்லது பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கு திருக்கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டுகிறோம்.

 

குடமுழுக்கு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் திருக்கோயில் அலுவலகப் பணி செய்ய ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதாக அறிய வருகிறோம். திருக்கோவில் நிர்வாகத்திற்குத் தேவையான ஊழியர்களை உடனடியாக பணி நியமனம் செய்திட தேவையான வழிவகை செய்திட தங்களை வலியுறுத்துகிறோம்.

 

அருள்மிகு பழனியாண்டவர்கலைக்கல்லூரி கல்வி நிறுவனத்தில் தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்பட்டு இருக்கக் கூடிய ஊழியர்கள் நிரந்தர பணியாளர்களாக நியமிக்கப்பட்டால் அவர்களுக்கு தேவையான சம்பளங்கள் அரசு வழங்கும். இதனால் திருக்கோயில் நிர்வாகத்தின் நிதிச்சுமை குறையும். இதை கவனத்தில் கொண்டு கலைக் கல்லூரியில் பணிசெய்யக்கூடிய தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கிட தேவையான நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகிறோம்.

 

திருக் கோயிலில் பணிசெய்யக்கூடிய அதிகாரிகள், தமிழர்களின் உடையான வேஷ்டி, சட்டை அங்கவஸ்திரம் அணிந்து வந்தால் திருக்கோயில் பணிக்கு ஏற்புடையதாக இருக்கும் என்கின்ற வகையில், தினசரி அல்லது வாரத்தில் இரண்டு நாட்கள் 'தமிழர் உடையில் திருக்கோயில் பணி 'என்பது குறித்து உத்தரவிடுமாறு கோரிக்கை வைத்தனர்.

Previous Post Next Post