கோவில்பட்டியில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 110  பவுன் நகை கொள்ளை

கோவில்பட்டியில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 110  பவுன் நகை கொள்ளை.

 


 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 110  பவுன் தங்கநகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

தூத்துக்குடி மாவட்டம்கோவில்பட்டி பசுவந்தனை சாலை திருப்பதி காலனியைச் சேர்ந்தவர் பொன்னம்பலம் மகன் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் சொக்கலிங்கம். இவர் கோவில்பட்டி சந்தைப்பேட்டைத் தெருவில் தனியார் மருத்துவமனை நடத்தி வரும் இவர், குடும்பத்தினருடன் டிசம்பர் 29ஆம் தேதி சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று ஊருக்கு திரும்பியுள்ளனர். வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  மேலும் அவர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 110  பவுன் தங்கநகைகளை மர்ம நபர்கள் திருடியது தெரியவந்தது.

 

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெபராஜ், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன் ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இதுகுறித்து மேற்கு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். எப்போதும் மக்கள் நடமாட்டம் காணப்படும் அப்பகுதியில் நடைபெற்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post Next Post