மாயமான வாலிபர் கிணற்றில் சடலமாக மீட்பு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மாயமான வாலிபர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை பெரம்பூர் வீரபாண்டி தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன் இவரது மகன் செல்வராஜ் (30) இவர் செய்யாறிலுள்ள தனது உறவினரான போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் கணேசன் என்பவரது வீட்டில் செல்போன் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 4ந் தேதி செல்வராஜ் தனது நண்பர்களுடன் மதியம் 12 மணியளவில் வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் மீண்டும் அன்றிரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் உடன்சென்ற நண்பர்களை கேட்டபோது செய்யாமூர் கிராமத்தில் மது அருந்திவிட்டு அனைவரும் தனித்தனியாக அவரவர் வீட்டுக்கு சென்றுவிட்டோம் என தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் செல்வராஜ் வீடு திரும்பாததால் அவரது உறவினரான கணசேன் அனக்காவூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து செல்வராஜை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று காலை செய்யாமூர் கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் வாலிபர் ஒருவர் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அவர் ஏற்கனவே மாயமாகி தேடப்பட்ட செல்வராஜ் என்பவர் தெரியவந்தது. மேலும் உயிரிழந்த செல்வராஜியின் உடலில் உள்ளாடை மட்டுமே அணிந்திருந்தார். உடலில் சிறுசிறு காயங்கள் இருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மதுகுடித்துவிட்டு குளிக்க சென்றபோது போதையில் தவறிவிழுந்திருக்கலாம் என தெரியவந்தது. மேலும் உடலில் சிறுசிறு காயங்கள் இருப்பதால் செல்வராஜி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்தினர். இதையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சடலததை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தபிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். மாயமான வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Previous Post Next Post