இன்று கொடிகாத்த குமரன் நினைவு நாள்

*கொடிகாத்த குமரன் இறந்த தினம் ஜன 11 1932*


திருப்பூர் குமரன் இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். 


இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார். 


1932-ம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 


1932-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து, கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில் உயிர் துறந்தவர் திருப்பூர் குமரன் . 


இதனால், கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.


ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் 1904 அக்டோபர் 4-ந்தேதி, நாச்சிமுத்து- கருப்பாயி தம்பதியினருக்கு முதல் மகனாகப் பிறந்தார். 


குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை ஆரம்ப பள்ளியிலேயே முடித்துக் கொண்டார். 


கைத்தறி நெசவுத் தொழிலை செய்து வந்த குமரன், 1923-ல் தனது 19-வது வயதில், 14 வயது ராமாயியை மணம் முடித்தார். 


கைத்தறி நெசவுத் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், மாற்றுத் தொழில் தேடி திருப்பூர் சென்று, ஈங்கூர் கந்தசாமி கவுண்டர் நடத்திய மில்லில் எடைபோடும் பணியில் சேர்ந்தார். 


காந்தி கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்ட குமரன், நாட்டு விடுதலைக்காக காந்தி அறிவித்த போராட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டார்.
 
தமிழ்நாடு அரசு திருப்பூர் குமரன் தியாகத்தைப் போற்றும் வகையில் திருப்பூரில் திருப்பூர் குமரன் நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது. 


இங்கு தற்காலிக நூல் நிலையம் உள்ளது. 


படிப்பகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. 


மேலும் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் வரைந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 


இவரது நூறாவது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில், அக்டோபர் 2004-ல் சிறப்பு நினைவுத் தபால் தலை இந்திய அரசால் வெளியிடப்பட்டது.


Previous Post Next Post