வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே உள்ள கால்வாயில் இளம்பெண் சடலம்

வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே உள்ள கால்வாயில் இளம்பெண் சடலமாக வீசப்பட்டுள்ளார். அவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். 

 

வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே உள்ள கழிவுநீர் கால்வாய் வழியாக பொதுமக்கள் சிலர் இன்று காலை நடந்து சென்றனர். அப்போது கால்வாயில் கவிழ்ந்த நிலையில் இளம்பெண் சடலம் கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள், வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இறந்த பெண் சிவப்பு நிற சுடிதார் அணிந்திருந்தார். அவர் தலைமுடியை பாப் கட்டிங் செய்துள்ளார். இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர், இவரை யாராவது அடித்து கொலை செய்து கால்வாயில் வீசினார்களா? அல்லது தவறி விழுந்து இறந்தாரா? என்பது தெரியவில்லை.

 

இதுகுறித்து போலீசார் கூறுகையில், இறந்த பெண் வடமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம். வேலூருக்கு வந்து காணாமல் போன வடமாநில பெண்களின் பட்டியலை வைத்து அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளோம். இறந்த பெண்ணுக்கு சுமார் 30 வயது இருக்கும். அவர் இறந்து 2 நாட்களுக்கு மேலாகியிருக்கலாம் என தெரிவித்தனர். மேலும் அந்த பெண்ணின் சடலம் அரை நிர்வாணத்துடன் மீட்கப் பட்டுள்ளதால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசார் மத்தியில் எழுந்துள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்....

Previous Post Next Post