மலேசியாவில் சிக்கிய 180 பேர் சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தனர்

ஊரடங்கால் மலேசியாவில் சிக்கிய 180 பேர் சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தனர்



இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது. இதனால் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமான சேவை, ரெயில், பஸ் போக்குவரத்து ஆகியவை தடை செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் தமிழகத்தில் தங்கியிருந்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பங்களாதேஷ், பிரான்ஸ் உள்பட பல நாடுகளை சேர்ந்த 5 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் சொந்த நாட்டிற்கு சிறப்பு விமானங்கள் முலமாக திருப்பி அனுப்பப்பட்டனர். அதுப்போல் வெளிநாடுகளில் தங்கி உள்ள இந்தியர்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து மத்திய அரசு கடந்த 7ந் தேதி முதல் வெளிநாடுகளில் சுற்றுலா சென்று தவிப்பவர்களை அழைத்து வர வந்தே பாரத் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. முதற்கட்டமாக பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வர 60க்கும் மேற்பட்ட சிறப்பு விமானங்களை இயக்கப்படுகிறது.


இதையடுத்து துபாய் மற்றும் குவைத்தில் இருந்து இயக்கிய 3 சிறப்பு விமானங்களில்  530 பேர் அழைத்து வரப்பட்டு தனியார் கல்லூரி மற்றும் தனியார் ஒட்டல்களில் 14 நாள் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.   


அதுப்போல் மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் 3 குழந்தைகள், 119 பெண்கள்  உள்பட 180 பேர் வந்தனர். இவர்களுக்கு குடியுரிமை மற்றும் சுங்க இலாகா அதிகாரிகள்  சோதனை செய்தனர்.  பின்னர் விமான நிலைத்திலேயே தமிழக பொது சுகாதார துறை சார்பில் கொரோனா பரிசோதனைக்காக சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பின்னர் அரசு மற்றும் தனியார்  பேருந்துகள் மூலமாக 180 பேரும் சென்னை மற்றும் புறநகரில் உள்ள  தனியார் கல்லூரி மற்றும் ஒட்டல்களில்  தனிமைப்படுத்த அழைத்துச் செல்லப்பட்டனர். 


கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனையில் யாருக்காவது உறுதி செய்யப்பட்டால் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தது சிகிச்சை அளிக்கப்படும். தொற்று இல்லாதவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைத்து பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சிறப்பு விமானத்தில் வந்தவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் உணவு பொட்டலங்களை அதிகாரிகள்  வழங்கினார்கள். 


சென்னைக்கு வரும் பயணிகள் தங்களுடைய சொந்த செலவில் ஒட்டல்களில் அரசு கண்காணிப்பில் தனிமைப்படுத்தி கொள்ளலாம். இல்லை என்றால் கல்லூரிகளில் அரசு அமைத்துள்ள முகாமில் இலவசமாக தங்கி கொள்ளலாம் என கூறுப்படுகிறது.


Previous Post Next Post