2 ஆயிரம் கி.மீ.,தொலைவில் உயிரிழந்த தொழிலாளி... உடலை கொண்டு செல்ல முடியாமல் வீடியோ காலில் இறுதிச்சடங்கை பார்த்த சோகம்

உடல்நலக்குறைவால் உயிரிழந்த வடமாநில தொழிலாளியின் உடலை கொண்டு செல்ல பணமில்லாமல் திருப்பூரில் அடக்கம் வீடியோ காலில் பார்த்து மனைவி மகள் வேதனை.



திருப்பூரில், உடல் நலக்குறைவால் உயிரிழந்த வடமாநில தொழிலாளியின் உடலை சொந்த மாநிலத்திற்கு கொண்டு செல்ல முடியாததால் உடல் திருப்பூரில் அடக்கம் செய்யப்பட்டது.


அவரது,இறுதி சடங்கை மனைவி மற்றும் மகள் வீடியோ காலில் பார்த்து வேதனை அடைந்துள்ளனர்.



கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் அச்சத்தை ஏற்புத்தியுள்ளது. இதனால், உலக நாடுகள் முழுவதும் நாளுக்கு நாள் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதனை, கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதனால், பல தொழில்கள் முடங்கி விட்டது. இதனால், திருப்பூர் மாவட்டத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தங்கள் அன்றாடத் தேவைக்கு சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வட மாநிலத்தில் இருந்து வந்து பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.


இந்நிலையில் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ரயில்கள் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் பரகான்ஸ் பகுதியை சேர்ந்த ஆசாத் (52) என்பவர் திருப்பூர், அனுப்பர்பாளையம் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மாரடைப்பு  ஏற்பட்டு இவர்  உயிரிழந்தார்.


அவரது உடலை 2154 கி.மீ., தூரம் உள்ள சொந்த ஊருக்கு கொண்டு  செல்ல முடியாததால் திருப்பூரிலேயே அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடல் அடக்கத்தை வடமாநிலத்தில் உள்ள அவரது மனைவி மற்றும் மகள் வீடியோ கால் மூலம் பார்த்து கண்ணீர் சிந்தி வேதனை அடைந்தனர்.



இதுகுறித்து திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் மாவட்ட செயல் தலைவர் முன்னா கூறியதாவது:  


மேற்குவங்க மாநிலம் பரகான்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஆசாத் காஜி (52 ). இவரது மனைவி பூட்டி பீவி. இவர்களது மகள் அஞ்சுரா ஹாதுன். இவர், மட்டும் கடந்த சில ஆண்டுகளாக தனது அண்ணன் மகன் சதாம் உசேனுடன் திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தார். இவருக்கு, ஏற்கனவே உடலில் பிரச்சனைகள் இருந்து வந்தது.


ஊரடங்கு காரணமாக வேலை இன்றி இருந்த ஆசாத்துக்கு கடந்த 13ம் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருடன் பணிபுரிந்தவர்கள் அவரை திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆசாத் உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


இதுகுறித்த தகவல் கிடைத்ததும் திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை அமைப்பு சார்பில்  மேற்குவங்கத்தில் உள்ள அவரது உறவினர்களிடம் தகவல் அளிக்கப்பட்டது. மேலும், அவரது உடலை மேற்குவங்கம் கொண்டு செல்ல போதிய பணம் மற்றும் வசதியில்லாத காரணத்தால் திருப்பூரில் எஸ்.ஏ.பி அருகில் உள்ள பள்ளி வாசல் அருகில் ஆசாத்தின் உடலை நல்லடக்கம் செய்யப்பட்டது.


இதைத்தொடர்ந்து, இஸ்லாமிய அடிப்படையில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு ஆசாத்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆசாத்தின் உடல் அடக்கம் செய்யும் நிகழ்வு வீடியோகால் மூலம் மேற்குவங்கத்தில் உள்ள அவரது மனைவி பூட்டி பீவி மற்றும் மகளுக்கு காண்பிக்கப்பட்டது.


இதை பார்த்து அவர்கள் இருவரும் கதறி அழுதது மிகுந்த வேதனையை ஏற்ப்படுத்தியது. இத்தகைய, சம்பவம் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Previous Post Next Post