திருப்பத்தூர் மாவட்டத்தில்  அமைச்சர் கே சி வீரமணி 34.85 கோடி  மதிப்பீட்டில் ஜல் ஜீவன் மிஷன் மூலம் குடிநீர் திட்டத்திற்கான பூமி பூஜை


 

திருப்பத்தூர் மாவட்டத்தில்  அமைச்சர் கே சி வீரமணி 34.85 கோடி  மதிப்பீட்டில் ஜல் ஜீவன் மிஷன் மூலம் குடிநீர் திட்டத்திற்கான பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

 

திருப்பத்தூர் மாவட்டம் மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் கீழ் குடிநீர் திட்டப் பணிகளுக்காக திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 6 ஒன்றியங்களுக்கு 34 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து முதல் கட்டமாக ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட தாமலேரி முத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 1கோடியே 65லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்காக மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே சி வீரமணி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

 

இந்த ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ஒகனக்கல்லில் இருந்து காவிரி நீரை விநியோகிப்பதின் மூலம் மொத்தம் 331 குக்கிராமங்கள் இணைக்கப்பட்டு 31 ஊராட்சிகளுக்குட்பட்ட 20 ஆயிரம் குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைக்கப்பட்டு பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்  சங்கர், வட்டார வளர்ச்சி திட்ட அலுவலர் பிரேம், திருப்பத்தூர் நகர செயலாளர் டி டி குமார், திருப்பத்தூர் ஒன்றிய செயலாளர் திருப்பதி,  ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ், மற்றும் கழக தொண்டர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Previous Post Next Post