தூத்துக்குடி காவல்துறையினருக்கு இரத்த தான முகாம் - மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் இரத்த தானம் வழங்கி துவக்கி வைத்தார்.!


உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறையினர் இரத்த தானம் முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  இரத்த தானம் வழங்கி துவக்கி வைத்தார்.

ஆண்டு தோறும் ஜுன் 14 ஆம் தேதி உலக இரத்ததான தினமாக கடைபிடிக்கபடுகிறது. இதனை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மில்லர்புரத்திலுள்ள தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ஆயுதப்படை காவலர்கள் 200 பேர் இரத்த தானம் வழங்குகின்றனர். 

இந்த இரத்த தான சிறப்பு முகாமை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  முதலில் இரத்தம் தானம் வழங்கி  துவக்கி வைத்தார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் ஒருவரிடம் இருந்து பெறப்படும் ரத்தம் 4 உயிர்களை காப்பாற்றும், ஆகவே இரத்ததானம் வழங்குபவர்கள் மகிழ்ச்சியாக இரத்த தானம் வழங்க வேண்டும்  என்றும், இரத்த தானம் வழங்குவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், இரத்த தானம் வழங்கியவர்களுக்கும், 

இரத்தம் எடுப்பதற்கு உதவிய தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர் சாந்தி தலைமையிலான மருத்துவக் குழுவினருக்கும் தனது பாராட்டையும் நன்றியினையும் தெரிவித்து சிறப்புரையாற்றினார்.

முகாமில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

 

இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர கண்ணபிரான் அவர்கள் மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவமனை இரத்த சேமிப்பு வங்கி பொறுப்பாளர் டாக்டர். சாந்தி ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.


இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி ஆயுதப்படை உதவி ஆய்வாளர் செலவக்குமார், ஜார்ஜ் லிவிங்க்ஸ்டன், தலைமை காவலர் ராஜா மற்றும் ரமேஷ் உட்பட காவல் துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post