கோவிலில் உள்ள பெண்கள் குளியல் அறையில் 3 ரகசிய கேமிராக்கள்.! - போலீஸ் தீவிர விசாரணை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சித்தவநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் திருக்கோவிலில் உள்ள பெண்களின் குளியலறையில், ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 கேமிராக்கள்  கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பெளர்ணமி தினத்தன்று நடைபெறும் பூஜைக்காக இக்கோவிலுக்கு வந்த பெண் பக்தர் ஒருவரால்தான், இந்த ரகசிய கேமிராக்கள் வைத்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் பல மாதங்களாக கோவிலுக்கு வரும் பெண்கள் குளிப்பதை ரகசிய கேமிராக்கள் மூலம் படம் எடுத்த மர்மநபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இதுவரை கோவில் நிர்வாகத்தினர் சார்பில், காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கிராமம் சித்தவநாயக்கன்பட்டி. இக்கிராமத்தில் குறிப்பிட்ட சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ காமாக்ஷியம்மன் திருக்கோவில் ஒன்று அமைந்துள்ளது. சுமார் 35 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இத்திருக்கோவிலில் மாதந்தோறும் பெளர்ணமி சிறப்பு பூஜைகளும், ஆண்டுக்கொருமுறை மாசிக்கொடை திருவிழாவும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்வதற்கென இந்த குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தரிசனம் செய்வதற்காக இக்கோவிலுக்கு வருகின்றனர். அவ்வாறு வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் இக்கோவிலில் தங்குவதற்கு, குளிப்பதற்கு என கோவில் நிர்வாகம் சார்பில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 17-ம் தேதி பெளர்ணமி தினத்தன்று கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து தரிசனம் செய்து கொள்வதற்காக ஏராளமானோர் இக்கோவிலுக்கு வந்திருந்தனர். அச்சமயத்தில் இக்கோவிலுக்கு வந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் குளிப்பதற்காக இக்கோவில் வளாகத்தில் உள்ள குளியலறைக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற பெண் குளியலறையில் சம்பந்தமில்லாத கருப்புநிற வயர் இருப்பதைக்கண்டு, இது என்னவென்று எடுத்து பார்த்தபோது அது கேமிரா என தெரியவந்துள்ளது. இதனையடுத்து குளியலறையில் ரகசியக் கேமிரா இருப்பதைக்கண்ட அப்பெண் அதிர்ச்சியடைந்து கோவில் நிர்வாகத்தினரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். இது வெளியில் தெரிந்தால் கோவிலின் பெயர் கெட்டுவிடும் என்று கூறி விசாரிக்கலாம் என கூறியுள்ளனர் கோவில் நிர்வாகத்தினர். 

கோவிலின் குளியலறையில் இருந்த ரகசிய கேமிரா கண்டெடுப்பு குறித்து தகவல் கிடைத்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார், இக்கோவிலுக்கு சென்று அங்குள்ள குளியலறையில் சோதனை செய்ததில் கூடுதலாக 2 ரகசிய கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து கோவில் நிர்வாகத்திடம் விசாரணை செய்ததில் இது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது எனவும், இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் கோவிலின் பெயர் கெட்டுவிடும் எனவும் காவல்துறையினரிடம் கூறியுள்ளனர். மேலும் இதுவரை கோவில் நிர்வாகம் சார்பில் இந்த ரகசிய கேமரா வைத்த மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எவ்வித புகார் மனு அளிக்க வில்லை என்பதும் இதுபற்றிய தகவல் தெரிந்தும் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசாரும் குற்றவாளியை கண்டுபிடிக்க தயக்கம் காட்டி வருவதும் பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. 

இக்கோவிலின் குளியலறையில் ரகசியமாக பொருத்தப்பட்டிருந்த கேமராக்களை பார்க்கும் போது இதன் மூலம் பெண்கள் குளிப்பதை பல மாதங்களாக தொடர்ந்து படம் எடுத்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஒரே சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மட்டும் வழிபடும் இக்கோவிலில் இச்செயல் அரங்கேறியிருப்பது அக்கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ஆண்மீக திருத்தலத்தில் பல மாதங்களாக பல பெண்கள் குளிக்கும் காட்சிகளை ரகசியமாக படமெடுத்த மர்ம அயோக்கினை போலீசார் விரைந்து கைது செய்வது மட்டுமின்றி, அவனிடம் இருக்கும் வீடியோ காட்சிகளை அழிக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

விளாத்திகுளம் அருகே புனிதமான இக்கோவிலில், இதுபோன்று நிகழ்ந்த இச்சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்

Ahamed

Senior Journalist

Previous Post Next Post