ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் பேருந்து நிலையம் என அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.
கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் தற்போது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இதனை அடுத்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள பால் விற்பனை செய்யும் கடைகள், மருந்தகங்கள், உணவகங்கள் ஆகியவை தமிழக அரசு விதித்துள்ள விதிமுறைகளின்படி செயல்பட்டு வருகிறது.
இதர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பேருந்து போக்குவரத்து பொது முடக்கம் என்பதால் பேருந்துகள் இயக்கப்படாமல் பேருந்து நிலையம் மற்றும் முக்கிய சாலைகள் என அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் காவல்துறையினர் எஸ்.ஆர்.டி கார்னர், எஸ்.பி.எஸ் கார்னர்,
வடக்கு பேட்டை, கோட்டுவீராம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இரும்பு தடுப்புகள் அமைத்து ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித்திரியும் வாகன ஓட்டிகளை கண்காணித்து அவர்களுக்கு அபராதம் விதித்தும், அவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பி வருகின்றனர்.