தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று புகையிலை விற்பனை தொடர்பாக 15 வழக்குகள் பதிவு செய்து 19 பேர் கைது மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் நடவடிக்கை.!


தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்கள், கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பாலாஜி சரவணன்

அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் பல்வேறு தனிப்படைகள் அமைத்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதைப்பொருள் வழக்குகளில் சம்மந்தப்பட்ட 

எதிரிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 178 பேரின்  வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 38 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் தூத்துக்குடி மாவட்டத்தில் மத்தியபாகம், தென்பாகம், தெர்மல்நகர், சிப்காட், ஆத்தூர், குலசேகரப்பட்டினம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி மேற்கு, கோவில்பட்டி கிழக்கு, 

கயத்தாறு மற்றும் குளத்தூர் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் 15 பெட்டிக் கடை மற்றும் டீக்கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டு "560 கூலிப்ஸ் (Cool lips)” பாக்கெட்டுகள் உட்பட 930 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு இதுவரை தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ததாக 862 வழக்குகள் பதிவு செய்து 896 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 5561 கிலோ புகையிலைப் பொருட்கள் மற்றும் 18 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதே போன்று இந்த ஆண்டு கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக 80 வழக்குகள் பதிவு செய்து 124 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 86 கிலோ கஞ்சா மற்றும் 21 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் கஞ்சா வழக்குகளில் ஈடுபட்ட எதிரிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் உட்பட மொத்தம் 178 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டு மதுபானம் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக 2282 வழக்குகள் பதிவு செய்து 2294 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து மொத்தம் 4545 லிட்டர் கொள்ளவு அடங்கிய மதுபாட்டில்கள் மற்றும் 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் என 27 பேர் உட்பட 115 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, தடைசெய்யப்பட்ட "கூலிப்ஸ”(Cool lips) புகையிலைப்பொருட்கள் போன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை போன்ற சட்டவிரோத செயலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் 

சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Previous Post Next Post