கோயில் குடமுழுக்குக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய இரும்பு வியாபாரி குடும்பம் - மூக்கில் விரல் வைத்த கிராம மக்கள்.!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சொந்த கிராமத்தில் நடந்த கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் குடும்பத்துடன் வந்து இறங்கி அசத்திய இரும்பு வியாபாரியை கிராம மக்கள் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியுடன் வரவேற்ற சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்புன் பேசப்பட்டு வருகிறது. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள தெற்கு தீத்தாம்பட்டி கிராமத்தில் உள்ளது அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் , ஸ்ரீ கன்னி விநாயகர், ஸ்ரீ சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக அதே கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர் குடும்பத்துடன் ஹெலிகாப்டரில் வந்து அசத்தினார்.நடராஜனின் தந்தை பாலசுப்பிரமணியன். இவர்களது சொந்த ஊர் தெற்கு தீத்தாம்பட்டி. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பாலசுப்பிரமணியன் தனது குடும்பத்துடன் சென்னை அருகேயுள்ள கும்மிடிப்பூண்டியில் குடியேறி வசித்து வருகிறார்.

பாலசுப்ரமணியன் மற்றும் அவரது மூத்த மகன் நடராஜன் ஆகியோர் இரும்பு கடை வைத்துள்ளனர். மற்றொரு மகன் ராஜதுரை ஜவுளிக்கடை வருகிறார். அவருடைய மூத்த மகன் நடராஜனுக்கு சிறுவயது முதலே ஹெலிகாப்டர், விமானத்தில் செல்ல வேண்டும் என்பது அவரது ஆசை. அதே போன்று நடராஜன் மகன் மோகித்க்கும் ஹெலிகாப்டரில் செல்ல ஆசை.

இதையெடுத்து மகன் மற்றும் பேரனின் ஆசையை நிறைவேற்ற கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு ஹெலிகாப்டரில் செல்ல ஏற்பாடு செய்தார். பெங்களூரில் உள்ள தனியார் ஹெலிகாப்டர் நிறுவனம் மூலமாக ஏற்பாடு செய்தார். அதன் படி நடராஜன், அவரது மனைவி சுந்தரவள்ளி, அவரது மகன் மோகித், சகோதரர் ராஜதுரை, உறவினர் அசோக் ஆகிய 5 பேரும் கும்மிடிப்பூண்டியில் இருந்து பெங்களூருக்கு காரில் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சொந்த ஊருக்கு வந்தனர்.

கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சிக்கு பங்கேற்க வந்த அவர்களை கிராமமக்கள், நண்பர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். நடராஜன் குடும்பத்தினருடன் தரையிறங்கிய ஹெலிகாப்டரை கிராமமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தது மட்டுமன்றி செல்ஃபியும் எடுத்து மகிழ்ந்தனர். இதனையடுத்து நண்பர்களையும் ஹெலிகாப்டரில் ஏற்றி ஒரு ரவுண்ட் பறந்து சென்று திரும்பியது அவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. கோயில் நிகழ்ச்சியில் பங்கேற்க குடும்பத்துடன் சென்ற நடராஜன் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அதே ஹெலிகாப்டரில் ஊருக்கு திரும்பினர்.    


Ahamed

Senior Journalist

Previous Post Next Post