பள்ளிக்குச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து எல்.கே.ஜி மாணவன் பலி- போன் பேசிக் கொண்டே ஆட்டோ ஓட்டிய டிரைவரால் நேர்ந்த சோகம் 7 பேர் காயம்.!*


தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் பகுதியில் இருந்து திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளிக்கு தினம் தோறும் பள்ளி மாணவ மாணவிகளை ஆட்டோ மூலம் அழைத்துச் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள முத்தாலங்குறிச்சி, ஊத்துப்பாறை, வசவப்பபுரத்தைச் சேர்ந்த 8 மாணவ மாணவிகளை ஏற்றிக் கொண்டு மேலநாட்டார்குளத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான ஆட்டோவை அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணி மகன் ராஜ் என்பவர் ஓட்டியுள்ளார். 

அனவரதநல்லூர் பகுதியில் ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது ஆட்டோ ஓட்டுநர் போன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதில் திடிரென்று ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் செய்துங்கநல்லூர் அருகே உள்ள ஊத்துப்பாறை கிராமத்தைச் சேர்ந்த ராஜா மகன் செல்வநவீன் என்ற நான்கரை வயது மாணவன் சம்பவ இடத்திலேயே பலியானார். 

இந்த பலியான மாணவன் செல்வநவீன் கடந்த வாரம் திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்டு இன்று தான் முதல் நாளாக பள்ளிக்கு சென்றான். 

மேலும் இந்த ஆட்டோவில் வந்த முத்தாலங்குறிச்சியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் மற்றும் மகள்கள் நவீன்குமார், செல்வராகவி, முகிலா, பார்வதிநாதன் மகன் குணவதி, நல்லத்தம்பி மகன் இசக்கி ராஜா, 

வசவப்பபுரம் ஆறுமுகக்குமார் மகள் அபிராமி, மகன் அபிவரதன் ஆகி 7 பேரும் காயமடைந்தனர். இதில் சில மாணவ மாணவிகள் இன்று தான் பள்ளிக்கு முதல் நாள் செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

உடனே இதுகுறித்து முறப்பநாடு போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிசார் இறந்த மாணவன் உடலையும், காயமடைந்த மாணவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய ஆட்டோ டிரைவர் ராஜை போலிசார் தேடி வருகின்றனர்.

Previous Post Next Post