வியாபாரிக்கு தடையில்லா சான்று வழங்க 3 லட்சம் லஞ்சம் - குளத்தூர் ஆர்ஐ,விஏஓ கைது - லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி.!

 

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே வியாபாரிக்கு தடையில்லா சான்று வழங்க ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ. ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி, விவசாயி. இவரும், அவரது குடும்பத்தினரும் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சுமார் 11 ஏக்கர் நிலத்தை அரசு கடந்த 2004-ம் ஆண்டில் முனியசாமியின் பெயருக்கு இலவச பட்டாவாக வழங்கியுள்ளது. அரசு சார்பில் இலவசமாக வழங்கப்பட்ட நிலத்தை 14 ஆண்டுகளுக்கு பின் விற்றுக்கொள்ளலாம் என்பதன் அடிப்படையில், தற்போது அந்த நிலத்தை விற்பதற்கு முனியசாமி கோவில்பட்டி உதவி கலெக்டரிடம் ஆட்சேபனை இல்லா சான்றுக்கு விண்ணப்பித்தார்.

இதையடுத்து அவரது பரிந்துரையின் பேரில், முனியசாமியின் மனு குளத்தூர் வருவாய் ஆய்வாளர் செந்தில்முருகனின் பார்வைக்கு வந்தது. அவர் ஆட்சேபனை இல்லா சான்று வழங்க வேண்டுமானால் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் 11 ஏக்கருக்கு ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்டார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத முனியசாமி இதுகுறித்து தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். 

இது குறித்து விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஹெக்டர் தர்மராஜ, இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ தலைமையிலான போலீசார் ஆலோசனைப்படி முனியசாமி நேற்று வருவாய் ஆய்வாளர் செந்தில்முருகனுக்கு ரூ.3 லட்சம் கொடுப்பதற்காக குளத்தூருக்கு வந்து அவரது போனில் ெதாடர்பு கொண்டு பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறி உள்ளார். ஆனால், வருவாய் ஆய்வாளர் செந்தில்முருகன் தான் வெளியூரில் இருப்பதாகவும், அந்த பணத்தை குளத்தூர் (கிழக்கு) கிராம நிர்வாக அலுவலர் உமேஷ்குமாரிடம் கொடுக்குமாறும், அவரிடம் இருந்து நாளை (திங்கட்கிழமை) பணத்தை பெற்றுக் கொள்வதாகவும் கூறினார்.

இதையடுத்து முனியசாமி கிராம நிர்வாக அலுவலகத்துக்கு வந்து, கிராம நிர்வாக அலுவலர் உமேஷ்குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.3 லட்சம் ரூபாய் நோட்டுகளை கொடுத்தார். அந்த பணத்தை உமேஷ்குமார் வாங்கியபோது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ தலைமையிலான போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் வருவாய் ஆய்வாளர் செந்தில் முருகன் அருப்புக்கோட்டையில் வைத்து கைது செய்யப்பட்டார். விவசாயிக்கு ஆட்சேபனை இல்லா சான்று வழங்க ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post