ஓசி புரோட்டா தர மறுத்த புரோட்டா மாஸ்டர் வெட்டிக் கொலை : தூத்துக்குடியில் பயங்கரம்.! - 5 பேருக்கு போலீஸ் வலை


தூத்துக்குடி, ராஜகோபால் நகரைச் சேர்ந்தவர் ஆனந்தப்பன் மகன் கருப்பசாமி, இவர் தூத்துக்குடி 3வது மைல் அரசு மருத்துவக் கல்லூரி அருகே காமராஜ் நகரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். 

நேற்று இரவு 10 மணியளவில் மதுபோதையில் ஹோட்டலுக்கு வந்த 3பேர் ஓசியில் பார்சல் கேட்டு தகராறு செய்து கடை உரிமையாளரை தாக்கியுள்ளனர். 


இதையடுத்து கடையின் புரோட்டா மாஸ்டராக வேலைபார்த்து வரும் முடிவைத்தானேந்தல் ஓதுவார் தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் பொன் செந்தில் முருகன் (31)உட்பட ஹோட்டல் ஊழியர்கள் அவர்களை தட்டிக் கேட்டுள்ளனர். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டது. 

இந்நிலையில் கடையில் வியாபாரம் முடிந்து கடை ஊழியர்களான பொன்செந்தில் முருகன், மற்றும் திரவிய ரத்தினம் நகரைச் சேர்ந்த பர்னபாஸ் மகன் தேவராஜ் (39), சாயர்புரம் ரைஸ்மில் தெரு முருகேசன் மகன் சாமுவேல் (37), அப்பகுதியில் பால்பூத் நடத்தி வரும் பிரையன்ட் நகர் 13வது தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் பழனிமுருகன் (55) ஆகியோர் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். 



ஆசிரியர் காலனி அருகே சென்றபோது 5பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து அரிவாளால் சராமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பொன் செந்தில் முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தேவராஜ், பழனிமுருகன், சாமுவேல் ஆகிய மூவரும் பலத்த காயம் அடைந்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்து தென்பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொன்செந்தில் முருகன் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனை்ககு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த மூவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவ இடத்தை எஸ்பி பாலாஜி சரவணன், டிஎஸ்பி சத்தியராஜ் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த கொலை தொடர்பாக தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராாஜாராம் வழக்கு பதிவு செய்து, 3வது மைல் புதுக்குடியைச் சேர்ந்த தவசி பெருமாள் மகன் கற்குவேல் (22) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் 4பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Previous Post Next Post