மாண்டஸ்' புயல் - காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால், தேவையின்றி மக்கள் வெளியே வர வேண்டாம் - வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை!

 

‘மாண்டஸ்' புயல் காரணமாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால், தேவையின்றி மக்கள் வெளியே வர வேண்டாம்; அவசியமான காரணங்களுக்கு மட்டுமே பயணம் செய்ய வேண்டும் - சென்னை போக்குவரத்து காவல்துறை

மழை நேரத்தில் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்...

மழை பெய்யத் தொடங்கும் முதல் சில மணி நேரங்கள், வாகன ஓட்டிகளுக்கு மிகவும் ஆபத்தானவை. சாதாரண நாட்களில், என்ஜின் ஆயில், கிரீஸ் ஆகியவை சாலையில் சிந்தி படிந்திருக்கும். அதனுடன் மழை நீரும் சேரும்போது சாலை மிகவும் வழுக்கலாக ஆகிவிடும். தொடர்ந்து மழை பெய்யும்போது, வழுக்கும் படலம் நீக்கப்பட்டுவிடும் என்றாலும், ஆரம்பத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

ஈரமான, வழுக்கும் சாலையில் சறுக்குவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், மிதமான, சீரான வேகத்தில் செல்ல வேண்டும். மழை நேரத்தின்போது சாதாரண வேளையைப் போல 'பிரேக்' சிறப்பாகச் செயல்படுவதில்லை என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.

சற்று முன்பாகவே 'பிரேக்'கை அழுத்துவதும், வழக்கமான அழுத்தத்தை விட மெதுவாகவும் 'பிரேக்'கை அழுத்துவது நல்லது. அது உங்களுக்கும், உங்களுக்கு முன்னால் உள்ள வாகனத்துக்கும் நிறுத்தும் தூரத்தை அதிகரிப்பதோடு, உங்களுக்குப் பின்னால் வரும் வாகன ஓட்டிக்கு நீங்கள் நிறுத்தப் போகிறீர்கள் என்ற எச்சரிக்கையும் தரும்.

முன்னால் செல்லும் வாகனத்துக்கும், உங்கள் வாகனத்துக்கும் 20-30 மீட்டர் இடைவெளி இருக்கட்டும். நெருக்கமாகச் சென்றால், அடுத்த வாகனத்தில் இருந்து அடிக்கும் தண்ணீ­ர் உங்கள் பார்வையை மறைக்கக்கூடும்.

தண்­ணீர் தேங்கிய சாலையில் போக்குவரத்துச் சிக்கலில் மாட்டிக்கொண்டால் வாகனத்தை அணைக்காதீர்கள். என்ஜின் ஓடிக்கொண்டே இருக்கட்டும். தேங்கியிருக்கும் தண்ணீ­ரின் அளவு தெரியாத நிலையில், சீராக, மெதுவாக வாகனத்தை ஓட்டுங்கள். இடையில் நிறுத்தாதீர்கள். நிறுத்தினால் 'எக்சாஸ்ட் குழாய்'க்குள் தண்­ணீர் புகுந்துவிடும்.

ஓடும் தண்­ணீரைக் குறுக்கே கடக்க முயற்சிக்காதீர்கள். உங்கள் வாகனத்தின் எடையை விட தண்­ணீரின் வேகம் அதிகமாக இருந்தால் ஆபத்து.

வளைவில் திரும்பும்போதும், சாலையில் ஒருபுறமாக ஒதுங்கும்போதும் 'இன்டிகேட்டர்களை' அவசியம் ஒளிர விடுங்கள். மழைநேரத்தின் போது வழக்கமான வேகத்தை விட மெதுவாகத் திரும்புங்கள்.

திறந்திருக்கும் பாதாளச் சாக்கடை மூடியில் சிக்கிக்கொள்வதைத் தவிர்க்க, சாலையின் மத்தியில் செல்லுங்கள். உங்களுக்கு முன்னால் செல்லும் வாகனத்தைக் கவனித்து, அதைப் பின்பற்றிச் செல்லுங்கள்.

வாகனம் நின்றுவிட்டால் பயந்துவிடாதீர்கள். நான்கு சக்கர வாகனம் என்றால் அடுத்தவர்களின் உதவியைப் பெற்று சாலையின் ஓரமாக ஒதுக்கி, 'ஹெல்ப் லைனுக்கு' அழையுங்கள். இரண்டு சக்கர வாகனம் என்றால், வண்டியில் எப்போதும் 'டூல் கிட்'டை வைத்திருப்பது உதவும்.

கடைசியாக, பாதசாரிகள் மீது தண்ணீ­ரைச் சிதறடித்துச் செல்லாதீர்கள். இரக்கத்தோடு நடந்துகொள்ளுங்கள்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post