காணும் பொங்கல் - தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை.! - எஸ்பி பாலாஜி சரவணன் எச்சரிக்கை.!

 

காணும் பொங்கலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில்  இருசக்கர வாகனங்களில் பயங்கரமாக சப்தம் எழுப்பிக் கொண்டு அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், பொதுஇடங்களில் அமர்ந்து மது அருந்தி கலகம் விளைவிப்பது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர்  மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காணும் பொங்கலை முன்னிட்டு பீச், பூங்கா மற்றும் அருகிலுள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பொதுமக்கள் அமைதியான முறையில் எவ்வித இடையூறும் இல்லாமல் மகிழ்ச்சிகரமாக சென்று வருவதற்கு மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனங்களில் சைலன்சரில்  அதிக சப்தம் எழுப்பக்கூடிய அளவில் மாற்றம் செய்து வைத்துக்கொண்டு பொதுமக்கள் அதிகம் செல்லும் இடங்களில் பொதுமக்கள் அச்சப்படும் வகையில் அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், பைக் ரேஸ் செல்லுதல், பைக்கில் சாகசம் செய்தல், விதிமுறைகளை மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், அத்துடன் அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். அதே போன்று 18 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் லைசன்ஸ் இல்லாமல் வாகனங்கள் ஓட்டி அதனால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் பின் விளைவுகளுக்கு பெற்றோர்கள் பொறுப்பாவார்கள் எனவும்,

 பொது இடங்களில் தேவையில்லாமல் அமர்ந்து மது அருந்திக் கொண்டு கலகத்தை உண்டு பண்ணுபவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பவர்கள்  மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,

குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க ஆண் மற்றும் பெண் போலீசார் சீருடை அணியாமல் பொதுமக்களில் ஒருவரோடு, ஒருவராக ஆங்காங்கே ரோந்துப் பணி மேற்கொள்வார்கள். சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. அதனால் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை, கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை கண்காணித்து தீவிர நடவடிக்கை எடுக்க பல்வேறு தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் ஒருவருக்கொருவர் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் விட்டுக்கொடுத்து சுமூகமான முறையில் நடந்து கொள்ளுமாறும், சின்ன, சின்ன பிரச்சனைகளையும் பெரிதாக்கி ஒருவருக்கொருவர் விரோத போக்கை வளர்த்துக்கொண்டு வன்முறையில் ஈடுபடக்கூடாது, ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் காவல்துறையை தொடர்பு கொண்டு சட்டப்படி தீர்வு கண்டு கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு உதவுவதற்கு காவல்துறை 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளது என்பதை மனதில் வைத்துக்கொண்டு காவல்துறையின் அவசர உதவிக்கு எண். 100 மற்றும் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை அலைபேசி எண். 95141 44100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். 

அவ்வாறு தெரிவிப்பவர்கள் பற்றிய விபரம் ரகசியமாக வைக்கப்படும்,  தகவல் தெரிவிப்பவர்கள் தங்களது  விபரங்கள் கூறத்தேவையில்லை. பிரச்சனை என்று கூறினால் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடவடிக்கை எடுப்பார்கள் எனவும், பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி நாளை காணும் பொங்கல் தினத்தை மகிழச்சியாக கொண்டாடுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post