இமயமலையில் சூரியனுக்கு இருக்கும் ஒரே கோவில் தெரியுமா? நோய்கள் தீர்க்கும் காதர்மால் சூரியனார் கோவில்!

வேதகாலத்துக்கு முன்னரே இந்த உலகத்தின் இயக்க சக்தியான சூரியனை நமது முன்னோர்கள் கும்பிட்டு வந்திருக்கிறார்கள். நமது வாழ்வியல், கலாச்சாரத்தோடு சூரிய வழிபாடு மிகவும் தொடர்புடையதாக இருந்து வந்து இருக்கிறது. அந்த அடிப்படையில், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சூரியன் கோவில்களும் கட்டப்பட்டு இருக்கின்றன.

நமது பாரதத்தில் மொத்தம் ஆறு சூரியனார் கோவில்கள் இருக்கின்றன. தமிழகத்தில் நவகிரக கோவில்கள் வரிசையில் கும்பகோணத்தில் சூரியனார் கோவில் உள்ளது. அடுத்ததாக ஒடிசாவின் கோனார்க்கில் சூரியனார் கோவில் உள்ளது. காஷ்மீரின் அனந்தநாக்கில் பல நூற்றாண்டுகள் கடந்த சூரியனார் கோவில் உள்ளது; அது சிதிலமடைந்து இருக்கிறது. குஜராத்தின் மொதீராவில் ஒரு சூரியனார் கோவிலும், குஜராத்தில் உள்ள கும்ளியில் நவகிரக சூரியர் கோவிலும் உள்ளது. உத்தரகாண்டின் காதர்மாலில் ஒரு சூரியனார் கோவிலும் உள்ளது.

 இது தவிர 1988ல் மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் ஜி.டி.பிர்லாவால் ஒரு சூரியர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இதையும் சேர்த்தால் இந்தியாவில் சூரியனுக்கு 7 கோவில்கள் உள்ளன. 

இவற்றில் நாம் காண இருக்கிற காதர்மால் சூரியன் கோவிலானது மிகவும் பழமை வாய்ந்தது. உத்தரகாண்டின் குமாவோன் பகுதியில் காதர்மால் என்கிற இடத்தில் கடல் மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 6900 அடி உயரத்தில் உள்ளது காதர்மால் சூரியர் கோவில். இந்த கோவில் 8ம் நூற்றாண்டின் இறுதியில் கத்யூரி வம்ச மன்னரான கட்டர்ம்மல்லா என்பவரால் கட்டப்பட்டது. அந்த காலத்தில் கற்களை அடுக்கி சுண்ணாம்பு மற்றும் பருப்பு பிசினை சேர்த்து கட்டி இருக்கிறார்கள். காலம் கடந்து கம்பீரமாக நிற்கிறது காதர்மால் சூரியனார் கோவில். 

இந்த கோவிலில் உள்ள சூரியன்,பராதித்யா என்றும் வ்ரதாதித்தியா என்றும் அழைக்கப்படுகிறார். மிகச்சிறப்பான முறையில் குமாவோனி கட்டிடக்கலையில் கட்டப்பட்டு உள்ளது. மூலஸ்தானத்தில் ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் நின்றபடி  அருள்பாலிக்கிறார் சூரியனார். கோயில் சுவர்களில் உள்ள தனித்துவமிக்க சிற்பங்கள் நம்மை ஈர்க்கின்றன. இந்த கோவிலில் சிவன்-பார்வதி மற்றும் லட்சுமி-நாராயணர் சிலைகளும் உள்ளன.

காதர்மால் கோயில் பல நூற்றாண்டுகளாக நோய்கள் தீர்க்கும் கோவிலாக கும்பிடப்படுகிறது. சூரிய வெளிச்சத்தில் கோவில் முன்புறம்  பிரார்த்தனை செய்வதும், வெயிலில் அமர்ந்து தியானிப்பதும், நோய்களைப் போக்கி மன அமைதியைக் கொடுக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். அமைதியான சூழ்நிலையும், புத்துணர்ச்சியூட்டும் இமயமலை மலைக்காற்றும் மனதுக்கு இதமளிக்கும்.

கோவில் வளாகத்திலிருந்து பிரமிப்பூட்டும் மலை மடிப்புகளுடன், பள்ளத்தாக்குகளையும், கீழே ஓடும் கோசி நதியையும் கண்டு ரசிக்கலாம். 

10 ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்ட மூலவர் சூரியனின் சிலை திருடப்பட்ட பின்னர், தனித்துவத்துடன் செதுக்கப்பட்ட கதவுகள்   டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்திற்கு மாற்றப்பட்டு விட்டன.  சிற்பக்கலைக்கு பெயர் பெற்ற இந்த கோவிலில் இப்போதுள்ள சூரியனார் சிலை 12ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டதாகும். கோவில் கட்டுமானம் முழுமை பெறாததாக தெரிகிறது.

மலர்கள் கொண்டு பூஜிக்கலாம். 

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்  22 மற்றும் பிப்ரவரி 22ம் தேதிகளில் கோவிலில் சூரியனார் சிலைமீது சூரியக்கதிர் விழுகின்றது.  இங்குள்ள கற்சிற்பங்களும், மர வேலைப்பாடுகளும் தனித்துவம் கொண்டதாக இருக்கிறது. சூரியனுடன் சேர்த்து 45 கோவில்கள் கொண்ட வளாகமாக இந்த கோவில் இருக்கிறது.

நுற்றாண்டுகள் கடந்த இமயமலையில் உள்ள சூரியனாரை தரிசிக்க வாய்ப்பு கிடைத்தால் தவறவிடாதீங்க