கருப்பட்டியில் கலப்படம் - உடன்குடியில் 92 டன் சீனி மூட்டை பறிமுதல் - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை.!

கருப்பட்டியில் கலப்படம் செய்வதற்க்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 92 டன் சர்க்கரையை தூத்துக்குடி மாவட்ட உணவுபாதுகாப்புத் துறை அலுவலர் மாரியப்பன் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி கருப்பட்டிக்கு  பிரசித்தி பெற்ற ஊர். இங்குள்ள ஆலைகளில் சர்க்கரையை பயன்படுத்தி கலப்பட கருப்பட்டி மற்றும்பனங்கற்கண்டு தயாரிக்கப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்தன. உணவுபாதுகாப்புத் துறை மாவட்ட அலுவலர் மாரியப்பன் தலைமையிலான அலுவலர்கள், சக்தி முருகன், முனியராஜ் ஆகியோர் அங்கு நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், 5 ஆலைகளில் கலப்படம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 1,340 மூட்டை (67 டன்) வெள்ளை சர்க்கரை மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.23.25 லட்சம். இந்த ஆலைகளுக்கு வெள்ளை சர்க்கரை விநியோகம் செய்த மொத்த விற்பனை நிறுவனத்திலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

அந்நிறுவனம் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் இன்றி செயல்பட்டது தெரியவந்தது. அங்கு உரிய ரசீதுகள் இல்லாமல் சுகாதாரமற்ற முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 டன் வெள்ளை சர்க்கரை பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 8.5 லட்சம் ஆகும். 


அந்த நிறுவனம் மீது டி ஆர் ஓ (ம) உணவு பாதுகாப்புத் துறையின் நீதி வழித்தீர்வு அலுவலரிடத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டப் பிரிவு 57 ன் கீழ் வழக்கு பதிவு செய்யும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு கிலோ சர்க்கரை அதிகபட்சம் ரூ.40-க்கு கிடைக்கும் நிலையில், கருப்பட்டி தயாரிக்க பதநீரை காய்ச்சும்போது, அதனுடன் வெள்ளை சர்க்கரையை அதிகம் கலந்து, ரசாயன நிறமியைச் சேர்த்து போலி கருப்பட்டி தயாரிப்பதை சிலர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அதனை அவர்கள் கிலோ 400 வரை விற்று கொள்ளை லாபம் பார்த்து வந்தனர். உடன்குடி பகுதியில் போலி கருப்பட்டி மற்றும் போலி பனங்கற்கண்டு தயாரிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று, உயர் நீதிமன்ற மதுரை கிளை சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post