பொதுமக்களை தாக்கி செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்து கொள்ளையில் ஈடுபட்ட திருநங்கைகள் 4 பேர் கைது.!

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்கள் இருவரை தாக்கி செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்து கொள்ளையில் ஈடுபட்ட திருநங்கைகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுபோன்று சட்ட விரோத செயலில் ஈடுபடும் திருநங்கைகள் குறித்து புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி முத்தையாபுரம் சுந்தர்நகரைச் சேர்ந்த ரத்தினம் மகன் ஜெகதீசன் (65) என்பவர் கடந்த 16.11.2022 அன்று தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த சில திருநங்கைகள் ஜெகதீசனிடம் பணம் கேட்டுள்ளனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அந்த திருநங்கைகள் ஜெகதீசனை தாக்கி அவரது பைக் மற்றும் சாவியையும் பிடுங்கியுள்ளனர். மேலும் அங்கு இருந்த மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த ஷரிப்புதின் மகன் சசீருதின் (33) என்பவரையும் அடித்து அவரிடம் இருந்த செல்போனையும் பறித்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து  ஜெகதீசன் அளித்த புகாரின் பேரில் மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவுபடி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன் தலைமையிலான போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் மேற்படி இருரையும் தாக்கி இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது பாளையங்கோட்டையைச் சேர்ந்த செல்வம் மகள் யாசினி (எ) அபினேஷ் (19), காயல்பட்டிணத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகள் பென்னிலா (எ) செல்வகணபதி (25), தூத்துக்குடி போல்டன்புரத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகள் சில்பா (எ) முத்துராஜ் (19) மற்றும் பாளையங்கோட்டை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சக்திவேல் மகள் பாவனா (எ) சரவணகுமார் (21) ஆகிய திருநகங்கைகள் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து மேற்படி போலீசார் திருநங்கைகள் 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனம் மற்றும் ரூபாய் 12,000/- மதிப்பிலான செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்று சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் திருநங்கைகள் குறித்து பொதுமக்கள் அவசர போலீஸ் தொலைபேசி எண். 100 மற்றும் 95141 44100 என்ற எண்ணிற்கு தகவல் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post