தூத்துக்குடியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கொட்டை பாக்கு கடத்தல் - முக்கிய குற்றவாளி கைது.! - வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அதிரடி!


 தூத்துக்குடியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கொட்டை பாக்கு கடத்தல் - முக்கிய குற்றவாளி கைது.! - வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அதிரடி!


கடந்த வாரம் இந்தோனேசியாவில் இருந்து 40 அடி நீளமுள்ள 4 கன்டெய்னர்களில் பழைய துணிகள் இறக்குமதி செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை திருப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இறக்குமதி செய்ததாக கூறப்படுகிறது.


இந்த நிலையில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில், அந்த கன்டெய்னரை சோதனை செய்தனர். அப்போது, பழைய துணிகள் முன்பகுதியில் வைக்கப்பட்டு இருந்தன. அதற்கு உள்பகுதியில் கொட்டைப்பாக்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இதில் சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான 65 டன் கொட்டைப்பாக்கு இருந்தது. உடனடியாக அதிகாரிகள் கொட்டைப்பாக்கை பறிமுதல் செய்தனர்.


இது தொடர்பான விசாரணையில் இறங்கிய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கடத்தலில் ஈடுபட்ட ரவிக்குமார் என்ற ரவி பகதூரை கைது செய்தனர். தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள அவருக்கு சொந்தமான அபி ஷிப்பிங் அன்ட் லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் M/s ஸ்ரீ அபிராமி அம்மன் மில்ஸ் ஆகியவற்றில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.


இந்தோனேசியாவில் இருந்து மேற்கூறிய கொட்டை பாக்கு கடத்தலில் மூளையாக செயல்பட்டவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தூத்துக்குடியில் உள்ள பிரபல ஷிப்பிங் நிறுவனத்தில் பணி புரிந்தவர் என தெரிய வந்துள்ளது. இவர் சில சுங்க அதிகாரிகளுடன் இணைந்து கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு, சுமார் ரூ.4 கோடி வரை சுங்க வரி ஏய்ப்பு செய்துள்ளார் என வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.


கைது செய்யப்பட்ட ரவிக்குமார் என்ற ரவி பகதூர்  நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இவரின் சுங்க அதிகாரிகளின் தொடர்பு மற்றும் நிதி பரிவர்த்தனை தொடர்பாக மேலதிக விசாரணை நடந்து வருகிறது எனவும், குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்கள் DRI அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Previous Post Next Post