பல்லடத்தில் செய்தியாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு... தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி...செய்தியாளர் சங்கங்கள் கண்டனம்

 திருப்பூர் அருகே தனியார் தொலைக்காட்சி செய்தியாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு. படுகாயத்துடன் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதி. காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா தனியார் தொலைக்காட்சி (news 7) செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேசபிரபு. இவர் காமநாயக்கன்பாளையம் கிருஷ்ணாபுரம் தோட்டத்தில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.


 இவரை கடந்த இரண்டு நாட்களாக அடையாளம் தெரியாத நபர்கள் பின் தொடர்ந்து வந்ததாகவும் தான் கொடுத்த செய்தியால் அதிருப்தி அடைந்த நபர்கள் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டிய நிலையில் நம்பர் பிளேட் இல்லாத வாகனங்களில் பின் தொடர்ந்து வருவது மற்றும் தனது வீட்டின் அருகே அனைவரிடமும் தன்னை பற்றி விசாரித்து வருகின்றனர். தனது உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என அவசர உதவி எண் 100க்கு அழைத்து பேசி உள்ளார். 

மேலும் தன்னை பின் தொடர்பவர்கள் குறித்து அவ்வப்போது காவல் துறைக்கு தகவல் தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு சுமார் 10 மணி அளவில் வீட்டின் அருகே சிலர் தன்னை நோட்டமிடுவதை கண்ட நேசபிரபு அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் தஞ்சமடைந்து காவலதுறையினருக்கு தெரிவித்துள்ளார்.

 அப்போது அவரை சுற்றி வளைத்த மர்ம நபர்கள் பெட்ரோல் பங்க் மேலாளர் அறையின் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று நேசபிரபுவை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினர். 

இதில் இரண்டு கை மற்றும் காலில் பலத்த காயத்துடன் கோவை தனியார் (கங்கா) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 இந்த தாக்குதலுக்கு திருப்பூர் மாவட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம், தேசிய பத்திரிகையாளர் சங்கம் (என்.யு. ஜெ.,) உள்ளிட்ட சங்கங்கள் கண்டனம் தெரிவித்ததுடன் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்

Previous Post Next Post