முகிலனை மீட்டுத்தரக்கோரி கலெக்டரிடம் மனு.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி சந்தித்து மனு அளிப்பதற்காக முகிலன் மீட்பு குழுவினை சேர்ந்தோர் கூட்டாக வந்தனர். தொடர்ந்து அவர்கள் முகிலனை கண்டுப்பிடித்து தரக்கோரி முழக்கங்களை எழுப்பி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக வந்தனர். அவர்களை கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுப்புகளை சாலையில் மறித்து வைத்து தடுத்து நிறுத்தினர். அதை தொடர்ந்து முகிலன் மீட்பு கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு படுகொலை குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் வீடியோ ஆதாரம் ஒன்றை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து அவர் காணாமல் போகுமாறு செய்யப்பட்டார். கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல் ஆகியும் அவர் மக்கள் முன்பு நிறுத்தப்படவில்லை. தமிழக அரசும் காவல்துறையும் முகிலன் குறித்த உண்மையை திட்டமிட்டு மறைத்து வருகிறது. எனவே சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் குறித்து 3 வாரத்திற்குள் மக்கள் மன்றத்தின் முன் நிறுத்த வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோ ஆதாரத்தின் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையின் அடி கல் அகற்றும் வரை எங்களது போராட்டம் ஓயாது. அதுவரை மக்கள் மன்றத்தின் முன் நாங்கள் போராட்டத்தை எடுத்துச் செல்வோம் என்றார்.


Previous Post Next Post