தமிழ் நாட்டு வரி வருவாயில் பெருமளவை மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது; தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி.!


சென்னை : தமிழ் நாட்டின் வரி வருவாயில் பெருமளவை மத்திய அரசேஎடுத்துக் கொள்வதால் தமிழகத்தில் பெட்ரோல்,டீசல் மீதான வாட் வரியை குறைப்பது தற்போது சாத்தியமல்ல என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

மிகவும் இக்கட்டான பொருளாதாரச் சூழலில் கரோனா நிவாரண நிதியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.9 ஆயிரம் கோடியை அரசு செலவிட்டுள்ளது. ஆளுநர் உரை முடிந்ததும் அடுத்த 2 வாரத்துக்குள் தமிழகஅரசின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கை வெளியாகும். நாங்கள் எதிர்பார்த்ததைவிட நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

கடந்த 2014-ல் மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு, பெட்ரோல், டீசல் மீதான வரிகளை உயர்த்தியது. இதன்மூலம் 2019-20-ல் மத்திய அரசுக்கு கிடைத்த ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி வரி வருவாய் 2020-21-ல் ரூ.3 லட்சத்து 90 ஆயிரம் கோடியாக அதாவது 63 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்துக்கு ரூ.336 கோடி குறைந்துள்ளது.இந்த ஆண்டு மேலும் சில மாற்றங்களை செய்துள்ளதால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிதி இன்னும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தால் யாரோ செய்யும் தவறுக்கு ஆதரவு கொடுப்பதுபோல ஆகிவிடும்.

கச்சா எண்ணெய் பேரலுக்கு 112 டாலராக இருந்தபோது பெட்ரோல் லிட்டர் ரூ.69 ஆக இருந்தது. இதில் மாநிலங்களுக்கு ரூ.14.47 கிடைத்தது. தற்போது கச்சா எண்ணெய் விலை 44 டாலராக குறைந்தும், லிட்டர் ரூ.98 ஆக உள்ளது. இதில் ரூ.23 தமிழக அரசின் வரியாகும். இதேபோல ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92. இதில் தமிழக அரசின் வரி ரூ.17 மட்டுமே. 

மத்திய அரசின் வரி விதிப்பால் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தார்கள். 2006-11 திமுக ஆட்சியிலும் வாட் வரி குறைக்கப்பட்டது. மறைமுக வரியைகுறைத்தால்தான் சாமானிய மக்கள் பயன்பெறுவார்கள் என்பதால் வரிகள் குறைக்கப்பட்டன. ஆனால், மத்திய பாஜக ஆட்சியிலும், முந்தையஅதிமுக ஆட்சியிலும் வரிகள் அதிகரிக்கப்பட்டன. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து பொருளாதார நிலை மோசமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு வரிகள் மூலம் கிடைக்கும் மொத்த வருவாயில் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் சதவீதம் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் இன்றைய பொருளாதார சூழ்நிலையில் உடனடியாக பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க முடியவில்லை. பொருளாதார நிலைமை மேம்பட்டதும் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவோம். வாட் வரியை குறைப்போம்.

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. தாங்கள் சொல்கிறபடிதான் மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்று மத்திய பாஜக அரசு நினைக்கிறது. வளர்ந்த மாநிலம் என்று சொல்லி தமிழகத்துக்கான நிதிப் பகிர்வை மத்திய அரசு குறைத்து வருகிறது.

டாஸ்மாக் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி முதல் ரூ.35 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தின் சொந்த வருவாய், மொத்தஉற்பத்தியில் 15 சதவீதம் வரை இருந்தது, 2014-க்குப் பிறகு சரிந்து சரிந்து 6 சதவீதமாக உள்ளது. ஜிஎஸ்டி வரி முழுமையாக வசூலாகாமல் உள்ளது. இவற்றையெல்லாம் சரிசெய்தால் நிதி நிலைமை மேம்படும். இதனை ஒரே மாதத்தில் செய்ய முடியாது. வாக்குறுதிகளை 5 ஆண்டுகளில் நிறைவேற்றுவோம்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Previous Post Next Post