தூத்துக்குடியில் மான்கொம்பு வீச்சரிவாள் உட்பட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த இளைஞர் கைது மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் நேரில் விசாரணை.!


தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக 4 மான் கொம்பு, 5 வீச்சு அரிவாள், 4 கத்தி மற்றும் ஷரங்கு எனப்படும் கைப்பிடியுடைய குத்துக்கம்பி போன்ற பயங்கர ஆயுரங்கள் வைத்திருந்தவர் கைது - சாயர்புரம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியான சாயர்புரம் போப்ஸ் கல்லூரி முன்பு சாயர்புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  ராஜேந்திரன், தலைமைக் காவலர்கள் சங்கர், இன்பராஜ் மற்றும் இளையராஜா ஆகியோர் நேற்று வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். 

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சிவத்தையாபுரம் சாமிகோவில் தெருவைச் சேர்ந்த காளிமுத்து மகன் ஆனந்த சேகர் (38) என்பவரை சோதனை செய்ததில், அவரது பைக்கில் 1 மான் கொம்பு, 1 கத்தி, 1 மற்றும் வீச்சு அரிவாள் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் அவரைக் கைது செய்து, மேற்படி மான் கொம்பு மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் அவர்களை சம்மந்தப்பட்ட எதிரி ஆனந்த சேகர் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனையிட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் அவர்கள் மேற்பார்வையில் ஏரல் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மேரி ஜெமிதா தலைமையில் போலீசார் அவரது வீட்டில் சோதனையிட்டதில், அவரது வீட்டிலிருந்து மேலும் 3 பெரிய வீச்சு அரிவாள், 1 அரிவாள், 3 பெரிய கத்தி, 3 மான் கொம்பு மற்றும் ஷரங்கு எனப்படும் கைப்பிடியுடன் கூடிய பெரிய குத்து கம்பி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து சாயர்புரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாயர்புரம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று எதிரி ஆனந்த சேகரின் பைக் மற்றும் அவரது வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 4 மான் கொம்பு, 3 பெரிய வீச்சு அரிவாள், 2 அரிவாள், 4 பெரிய கத்தி மற்றும் ஷரங்கு எனப்படும் கைப்பிடியுடன் கூடிய பெரிய குத்து கம்பி ஆகியவற்றை பார்வையிட்டு விசாரணை செய்தார்.  

பின் காவல்துறை அதிகாரிகளிடம் எதிரி ஆனந்த சேகருக்கு யார், யாருடன் தொடர்பு உள்ளது, அவர் எதற்காக சட்டவிரோதமாக  இதுபோன்ற பயங்கர ஆயுதங்களை வைத்துள்ளார் என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி எதிரியை கைது செய்த சாயர்புரம் காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பாராட்டினார் இந்நிகழ்வின்போது ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன், ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் மேரி ஜெமிதா, தனிப்பிரிவு தலைமைக் காவலர் மைக்கேல்ராஜ் பிரதீப் உட்பட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.

Previous Post Next Post