பெண் எஸ்பிக்கு முத்தம் : ஐ.ஜி.முருகன் மீதான பாலியல் வழக்கு செப்.23ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை.!

பெண் எஸ்பிக்கு முத்தம் : ஐ.ஜி.முருகன் மீதான பாலியல் வழக்கு செப்.23ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை


தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி.முருகன் மீதான பாலியல் வழக்கு தெலுங்கானாவிற்கு மாற்றப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. 

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி.முருகன் மீது கடந்த 2019ம் ஆண்டு பெண் எஸ்.பி ஒருவர் பாலியல் புகார் கொடுத்து இருந்தார். 

லஞ்ச ஒழிப்புத்துறை பெண் எஸ்பியை அந்த துறையின் உயர் அதிகாரியான ஐஜி.முருகன் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்ததாக பாலியல் புகாரில் கூறப்பட்டது. 

இது குறித்து தமிழக டிஜிபி உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட விசாகா குழு சரியாக செயல்படவில்லை என்று கூறி அந்த பெண் எஸ்பி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தெலங்கானா மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.

மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக ஐஜி.முருகன், மற்றும் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு ஆகியோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,'வழக்கை தமிழக அதிகரிகளே விசாரிக்க வேண்டும். அதேப்போன்று இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கும் தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 

நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையிலான அமர்வு முன்பு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கு, நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. கோரிக்கையை பரிசீலித்த நீதிபதிகள், வரும் 23ம் தேதி இந்த வழக்கின் விசாரணை நடைபெறும் என்று அறிவித்தனர். 

நீதிபதி சுபாஷ் ரெட்டி தலைமையிலான அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

Previous Post Next Post