மாணவர்களை பள்ளிக்கு கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை - உயர்நீதிமன்றம்


மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் நேரடியாக பள்ளிக்குச் செல்ல தடை கோரி திருநெல்வேலியை சேர்ந்த அப்துல் வஹாபுதீன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், ‛60க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனா நோய்த் தொற்றின் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். பல பள்ளிகளில் மாணவர்கள் கட்டாயம் நேரடி வகுப்பிற்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர்,' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‛மாணவர்களை வகுப்புக்கு வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம். மாணவர்களை கட்டாயப்படுத்தும் பள்ளிகளின் விவரங்களை மனுதாரர் தெரிவித்தால் அந்த பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்,' எனத் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கு குறித்து அரசு முதன்மை செயலர், பள்ளி கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Previous Post Next Post