விசைத்தறி உரிமையாளர்கள் 2 ஆயிரம் பேர் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்!

 திருப்பூர், கோவை மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரியும் ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்தும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

திருப்பூர் கோவை மாவட்டத்தில் விசைத்தறி தொழில் என்பது முக்கிய தொழிலாக விளங்கி வருகிறது. இத்தொழிலை நம்பி சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்ட கூலியே தற்போது வரை வழங்கப்பட்டு வருகிறது. 

7 ஆண்டுகள் கடந்த நிலையில் அனைத்து பொருட்களும் விலை உயர்வை சந்தித்துள்ளது. அன்றாட தேவையான மளிகை காய்கறி உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலைவாசியும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்த்தப்படாமல் உள்ளது. இதனால் பலர் இந்த தொழிலை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 எனவே கூலியை உயர்த்த கோரி கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சோமனூர் ரகங்களுக்கு 23 சதவீதமும், பல்லடம் ரத்தத்திற்கு 20 சதவீதமும் என கூலி உயர்வு பெற தீர்மானிக்கப்பட்டது. எனினும் ஜவுளி உற்பத்தியாளர்கள் இந்த கூலி உயர்வை வழங்காததால் ஜனவரி 9 ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை விசைத்தறி உரிமையாளர்கள் துவங்கி உள்ளனர். திருப்பூர் கோவை மாவட்டத்தை சேர்ந்த 9 சங்கங்கள் இணைந்து கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் இரண்டு மாவட்டத்திலும் சேர்த்து 2 லட்சம் விசைத்தறி களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 16 நாட்களாக தொடரும் இந்த வேலை நிறுத்தம் காரணமாக 800 கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நேரடியாக 2 லட்சம், மறைமுகமாக 2 லட்சம் என 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். உடனடியாக தமிழக அரசு இந்த பிரச்சினையில் தலையிட்டு கூலி உயர்வுக்கு சுமூக தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து, மேலும் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் தங்கள் நிலையை எடுத்துக் காட்டும் விதமாக திருப்பூர் கோவை மாவட்ட எல்லை பகுதியான காரணம்பேட்டை பகுதியில் 2 ஆயிரம் பேர் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப தங்களுக்கும் நியாயமான கூலி உயர்வு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Previous Post Next Post