கள்ளக்காதலியுடன் வீட்டுக்கு வந்த கணவன் - மிளகாய் பொடி தூவிஅடித்துக் கொன்ற மனைவி!

தென்காசி அருகே கள்ளக்காதலியுடன் வீட்டுக்கு வந்த கணவனை முகத்தில் மிளகாய் பொடி தூவி கட்டையால் அடித்துக் கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் திருமலாபுரத்தை சேர்ந்தவர் முருகன் ( 40). கொத்தனார் . இவரது மனைவி நாச்சியார் ( 35). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில், முருகனுக்கு வெறொரு பெண்ணுடன் தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணை நேற்று முன்தினம் முருகன் தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

இதனால் நாச்சியாருக்கும், முருகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, முருகன் அழைத்து வந்த பெண்ணை நாச்சியார் தாக்க தொடங்கியுள்ளார். இதனால் இருவருக்கும் கை கலப்பாகியுள்ளது.. அப்போது, அக்கம் பக்கத்தினர் ஒடி வந்து சண்டையை தடுத்து சமாதானம் செய்துள்ளனர். அதன் பின்னர் அன்று இரவு முருகன் குடித்து விட்டு வந்து மனைவி நாச்சியாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இருவரும் மாறி மாறி தகாத வார்த்தைகளில் பேசி சண்டையிட்ட நிலையில் ஒரு கட்டத்தில் ஆத்திரம்டைந்த நாச்சியார் முருகன் முகத்தில் மிளகாய் பொடியை தூவி வீட்டில் இருந்த கட்டையை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த செங்கோட்டை போலீசார் முருகனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நாச்சியார் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்காதலியை வீட்டிற்க்கு அழைத்து வந்த கணவனை மனைவி கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post