ஸ்விக்கி’ ஊழியரை கன்னத்தில் அறைந்த காவலர் சதீஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் அதிரடியாக கைது!

கோவையில் பெண்ணை இடித்து விட்டு சென்ற பள்ளி வேனை நிறுத்தி தட்டிக்கேட்ட ஸ்விக்கி ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர் சதீஷ் தாக்கிய வீடியோ வைர லான நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யபட்டதோடு, அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது  செய்யப்பட்டுள்ளார்.

கோவை நீலாம்பூர் பகுதியை சேர்ந்த உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இளைஞர் ஒருவர் நின்றபோது, அவ்வழியாக சென்ற தனியார் பள்ளி வாகனம் சாலையில் நடந்து சென்ற ஒரு பெண்னை இடித்துவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.

https://twitter.com/Srinietv2/status/1532994405618987010?t=XRAGZgmNBjHt12whdk9Hlw&s=19

இதனையடுத்து அந்த வேனை துரத்திச் சென்ற இளைஞர் தடுத்து நிறுத்திக் கேட்டபோது, அங்கு வந்த போக்குவரத்து காவலர் இதனை கேட்க நீ யார் எனக் கேட்டு கடுமையாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தாக்குதலுக்குள்ளானவர் மோகனசுந்தரம் என்பதும், பட்டதாரி இளைஞரான இவர் குடும்ப சூழல் காரணமாக டெலிவரி பாய் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. இந்நிலையில் தாக்குதல் சம்பவம் குறித்து மோகனசுந்தரம் கோவை காவல் ஆணையரிடம் தாக்கிய காவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு ஒன்றை அளித்தார். இந்நிலையில் மோகன சுந்தரத்தை தாக்கிய காவலர் சதீஷ் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் எந்தவித தவறும் செய்யாமல் அதே நேரத்தில் நடந்த தவறை தட்டிக் கேட்ட இளைஞரை பொது இடத்தில் வைத்து தாக்குவதற்கு காவலருக்கு உரிமையை யார் கொடுத்தது எனவும், காவல் துறையில் பணியாற்றினால் யாரை வேண்டுமானாலும் அடிக்கலாமா? என சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதம் கிளம்பியுள்ளது. அதே நேரத்தில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தாக்குதல் நடத்திய காவலரை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்வது தான் உச்சபட்ச தண்டனையா என கேள்வி எழுப்பியுள்ள சமூக வலைதளவாசிகள் , மோகனசுந்தரத்தை தாக்கிய சதீஷை பணியிடை நீக்கம் செய்வதோடு, அவரை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் காவலர் சதீஷ் பணியிடை நீக்கம் செய்யபட்டதோடு, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக கோவை போலீஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,'போக்குவரத்து காவலர் 2846 சதீஸ் மோகனசுந்தரத்திடம் சென்று இதனை விசாரிக்க நாங்கள் இருக்கிறோம் நீ யார் என்று கேட்டு அவரை கைகளால் தாக்கியதாக வாட்ஸ்அப் குழுவில் வீடியோ வந்துள்ளது. இது தொடர்பாக மோகனசுந்தரம் இன்று 04.06.2022ம் தேதி கொடுத்த புகாரின் பேரில் E2 பிளமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி போக்குவரத்து காவலர் திரு சதீஸ் கைது செய்யப்பட்டு தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.' என கூறப்பட்டுள்ளது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post