பெற்றோர்களை தாக்குவது பெரும்பாவம் இனியாவது தாய் தந்தையை போற்றுகின்ற நிலையை உருவாக்குவோம் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேதனை

பெற்றோர்களை தாக்குவது பெரும்பாவம் இனியாவது தாய் தந்தையை போற்றுகின்ற நிலையை உருவாக்குவோம். இல்லையேல் முதுமையில் நாமும் படாதபாடு படுவோம் என்பது உறுதி சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேதனை      
உலகிலேயே பெற்றோரையும் முதியோரையும் போற்றிப் பாதுகாத்த மனிதநேய பண்பின் புகலிடமாக விளங்கிய தமிழ்நாட்டில் தற்பொழுது அது முற்றிலும் சீர்குலைந்து நம்மை உலகிற்கு அறிமுகம் செய்த தாய் தந்தையரை சொத்துக்காகவும் பொருளுக்காகவும் தொடர்ந்து பலர் வீட்டை விட்டு துரத்துவதும், அடித்து உதைத்து தாக்கப்படுவதும் கொலை செய்வதுமான சம்பவங்கள்   அடிக்கடி இரக்கமற்ற முறையில் அரங்கேறி வருவது மிகவும் கவலை கொள்ள செய்துள்ளது. குறிப்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் சொத்துக்காக மகன் தனது தந்தையை அடித்து உதைக்கும் காட்சியும், தேனி மாவட்டத்தில் தனது சித்தப்பாவை பெட்ரோல் ஊற்றி எரிக்கும் சம்பவமும் மயிலாடுதுறை மணல்மேட்டில் தனது தாயை கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவமும் மனதை மிகவும் உருக்குகிறது. நாகரிகமும் பண்பாடும் வளர்ந்த பிறகும் கூட மனிதத் தன்மையை இழந்து நாம் நிற்கின்றோம் என்பதையே இது காட்டுகின்றது. ஒவ்வொரு மனிதனையும் உருவாக்க தாய் தந்தையர் படும் கஷ்டத்தை யாரும் மறந்து விடக்கூடாது. குழந்தைப் பருவம் பள்ளிப் பருவம் இளமைப் பருவம் என்று அத்தனையிலும் தங்கள் கடமையை முழுமையாக நிறைவேற்றி வயது முதுமை அடைகின்ற நிலையில் அவர்களுக்கு பாதுகாப்பாக ஆறுதலாக இருக்க வேண்டிய மகன்கள் மகள்கள் ஆற்ற வேண்டிய கடமையை நன்றி கடனை திரும்பி செலுத்தாமல், அதற்கு நேர் எதிர் மாறாக பெற்றோரை துன்புறுத்தி கொலை செய்கின்ற அளவிற்கு தரம் தாழ்ந்து காட்டுமிராண்டித்தனமாக கீழ் நிலைக்குச் செல்வது என்பது ஒரு பொழுதும் ஏற்கவும் முடியாது. மன்னிக்கவும் முடியாது. இவ்விஷயத்தில் தவறிழைத்தவர்களை உச்சபட்சமாக தண்டிக்க வேண்டும். அந்த தண்டனையின் வாயிலாக மற்றவர்களுக்கு இதுபோன்ற கொடூர எண்ணமே வரக்கூடாது என்னும் நிலையை உருவாக்க வேண்டும். அதற்கான முன் முயற்சிகளை நீதிமன்றமும் சமூகமும் சுற்றத்தாரும் மேற்கொள்ள வேண்டும். பெற்றோரை தனித்து தவிக்க விட்டு முதியோர் இல்லத்திற்கு அனுப்புவோரையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இனியாவது தாய் தந்தையை போற்றுகின்ற நிலையை உருவாக்க அனைவரும் பாடுபடுவோம். இல்லையேல் முதுமையில் நாமும் படாத பாடுபடுவோம் என்பது உறுதி என்று சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் வேதனை தெரிவித்து உள்ளார் 
Previous Post Next Post