பிளாஸ்டிக்கும், பாழாப்போன பார்சலும்.! - பாலித்தீன் பைகளில் உணவுப் பொருட்களை பொட்டலமிட தடை. மீறினால் அபராதம்.!

தூத்துக்குடி மாவட்டத்தில் பாலித்தீன் பைகளில் சூடான உணவுப் பொருட்கள் பொட்டலமிடுவது தடை செய்யப்படுகிறது என்றும் மீறும் உணவு வணிகர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடியில், பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக்கும், பாழாப்போன பார்சலும் என்ற குறும்படத்தை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கூறியதாவது:

அனுமதிக்கப்படாத உணவுத் தரம் இல்லாத ப்ளாஸ்டிக் பைகள் அல்லது கொள்கலன்களில் சூடான உணவுப் பொருட்களை பொட்டலமிடும் பொழுது, அப்பைகளிலிருந்து, டைஈதைல்ஹெக்சைல் தாலேட் மற்றும் பிஸ்பினால்-v போன்ற வேதிப்பொருட்கள் வெளியாகி, அவை உணவுடன் கலந்துவிடும்.  வேதிப்பொருட்கள் கலந்த உணவினைத் தொடர்ந்து எடுத்துக்கொள்பவர்களுக்கு, ஹார்மோன் பிரச்சினைகள், சிறுநீரகக் கற்கள், ஈரல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்ற நோய்கள் எதிர்காலத்தில் உருவாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்பதிற்கு பல அறிவியல் ஆய்வுகள் ஆதாரமாக உள்ளது.

உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் (பொட்டலமிடுதல்) ஒழுங்குமுறைகள், 2018-ன் பட்டியல்-IIIல் உணவுப் பொருட்களைப் பொட்டலமிடப் பயன்படுத்த வேண்டிய உணவுத் தர பிளாஸ்டிக் பொருட்களின் வகைகள் குறித்தும், அதே ஒழுங்குமுறைகளின் பட்டியல்-IVல் உணவுப் பொருட்களின் வகைகளுக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டிய பொட்டலமிடும் பொருட்களின் வகைகளும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையத்தால் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், அனுமதிக்கப்படாத உணவுத் தரம் இல்லாத ப்ளாஸ்டிக்கில் சூடான உணவுப் பொருட்களைப் பொட்டலமிடக் கூடாது எனவும், அதில் உள்ள ஆபத்துகள் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை மேற்கொண்டுவந்துள்ளது. இருந்தாலும் பெரிய அளவில் மாற்றம் ஏதுமில்லை. எனவே, அனுமதிக்கப்படாத உணவுத் தரம் இல்லாத ப்ளாஸ்டிக்கில் உணவுப் பொருட்களைப் பொட்டலமிடக்கூடாது என்பதை மேலும் வலியுறுத்தும் விதமாக, தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள, "பிளாஸ்டிக்கும் பாழாப்போன பார்சலும்” என்ற விழிப்புணர்வு குறும்படம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதே வேளையில், சூடான உணவுப் பொருட்களை அனுமதிக்கப்படாத உணவுத் தரம் இல்லாத ப்ளாஸ்டிக்கில் பொட்டலமிடுவதால், ப்ளாஸ்டிக்கிலிருந்து வெளிப்படும் வேதிப்பொருட்களால் நுகர்வோர்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட உள்ள பொது சுகாதாரக் குறைபாடுகளைத் தடுக்க, சூடான உணவுப் பொருட்களை, அனுமதிக்கப்படாத உணவுத் தரம் இல்லாத ப்ளாஸ்டிக்கில் பொட்டலமிடுவதைத் தடை செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகின்றது.

எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் சூடான உணவுப் பொருட்களை அனுமதிக்கப்படாத உணவுத் தரம் இல்லாத ப்ளாஸ்டிக்கில் பொட்டலமிடுவது இன்று முதல் தடை செய்யப்படுகின்றது. இதற்கான உரிய ஆணை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது உடனே அமலுக்கு வருவதால், உணவு வணிகர்கள் டீ, காபி, பால், சாம்பார், ரசம் மற்றும் இதர சூடான குழம்பு வகைகளையும் கூட்டு, பொரியல் போன்ற சூடான உணவுப் பொருட்களையும் மேற்கூறிய ஒழுங்குமுறைகளின் கீழ் அனுமதிக்கப்படாத உணவுத் தரம் இல்லாத ப்ளாஸ்டிக் பைகள் அல்லது கொள்கலன்களில் உணவுப் பொருட்களைப் பொட்டலமிட்டு விற்பனை செய்யக்கூடாது எனவும் உத்திரவிடப்படுகின்றது. 

தவறும்பட்சத்தில், குற்றமிழைத்தவர் உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ் பெற்றவராகவோ அல்லது அதற்குத் தகுதி வாய்ந்தராகவோ இருப்பின், மேற்கூறிய சட்டத்தின் பிரிவு 69-ன் கீழ் "சமரசத் தீர்வு” மூலம் அபராதம் விதிக்க மாவட்ட நியமன அலுவலருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தினைப் பிரயோகித்து, அதே சட்டத்தின் பிரிவு 55, 56 மற்றும் 58-ன் கீழ், முதல் முறையாக குற்றம் செய்தவராக இருப்பின், ரூ.2000/-ற்கு மிகாமலும், இரண்டாம் முறை குற்றமிழைத்தால், ரூ.5000/-ற்கு மிகாமலும் அபராதம் விதிக்கப்படும். ஆனால், ஒரே வணிகர் திரும்பவும் மூன்றாம் முறையாகக் குற்றமிழைத்தால், ரூ.10000/- அபராதம் விதிக்கப்படுவதுடன், உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு, கடையின் இயக்கத்தினை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 

அதேசமயத்தில், குற்றமிழைத்தவர் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றவராக இருந்தால், மாவட்ட வருவாய் அலுவலரிடத்தில் மேற்கூறிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்படுகின்றது. உணவு வணிகர்கள் தங்களது கடைகளின் முகப்பில், "இங்கு அனுமதிக்கப்படாத உணவுத் தரம் இல்லாத ப்ளாஸ்டிக் பைகள் அல்லது கொள்கலன்களில் உணவுப் பொருட்களைப் பொட்டலமிட்டு விற்பனை செய்யப்படமாட்டாது” என்ற அறிவிப்பு பலகையை நிறுவ வேண்டும் எனவும், நுகர்வோர்கள் உணவுப் பொருட்களைப் பார்சல் வாங்க, தூக்குவாளி, பிளாஸ்க், டிபன் பாக்ஸ், டிபன் கேரியர் உள்ளிட்ட பாத்திரங்களை கொண்டு சென்று மாவட்ட நிர்வாகத்தின் இந்நல்முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.






Ahamed

Senior Journalist

Previous Post Next Post