தூத்துக்குடி : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பயங்கரம் - வழக்கறிஞர் வெட்டிக் கொலை!!!

 


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சோரீஸ்புரம் பகுதியில் வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் மர்மநபர்களால் வெட்டிப் படுகொலை!

தூத்துக்குடி அய்யனடைப்பு சோரீஸ்புரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் பிச்சைக்கண்ணு மகன் முத்துக்குமார் (43). இவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நகை கடன் வழங்கும் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இன்று பிற்பகல் 2.15 மணியளவில் அவர் கடையில் இருந்தபோது 3 பைக்குகளில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் அவரை சராமாரியாக தாக்கி கொலை செய்துள்ளனர். 

பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது. இதனால் கடையில் இருந்த 2 பெண் ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். கொலை குறித்து தகவல் அறிந்து சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், டிஎஸ்பி (பொ) சத்யராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கோரம்பள்ளத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தூத்துக்குடி நீதிமன்றத்தின் அருகே படுகாெலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் முத்துக்குமார் முதல் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்த விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு எதுவும் காரணம் உள்ளதா என்பது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

ஆட்சியர் அலுவலகம் அருகே வழக்கறிஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



Ahamed

Senior Journalist

Previous Post Next Post