சுரண்டை அருகே மானூர் கால்வாய் சீரமைப்பு பணி கலெக்டர் ஆய்வு

 

சுரண்டை, ஜூன். 17

வீரகேரளம்புதூர் அருகே மானூர் கால்வாய் அகலப்படுத்தும் பணியை மாவட்ட கலெக்டர் ஷில்பா சதீஷ் பிரபாகர் பார்வையிட்டார். மானூர் பகுதி குளங்களுக்கு செல்லும் சுமார் 32 கிலோமீட்டர் நீளமுடைய மானூர் கால்வாய் வீரகேரளம்புதூர் அருகே சிற்றாற்றில் இருந்து பிரிந்து செல்கிறது. இக்கால்வாய் செல்லும் வழியில் 20 குளங்கள் உள்ளன.மழைக்காலங்களில் கால்வாயின் வழியே செல்லும் வழியில் உள்ள 20 குளங்கள் நிறைந்த பின்னர் மானூர் பெரிய குளத்தை தண்ணீர் வந்து அடைகிறது. ஆனால் இக்கால்வாய் செல்லும் வழி நெடுகிலும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதாலும், பல காலங்களாக இக்கால்வாய் தூர்வாரப்படாமல்  இருப்பதாலும், கால்வாயின் வழியே செல்லும் நீர் ஓட்டம் தடைபட்டு  மானூர் பெரிய குளத்திற்கு நீர் செல்வது தடை படுகிறது. இதனால் மானூர் பெரியகுளம் விவசாயிகள் பெரிதும் துன்பம் அடைந்து வரும் நிலையில், மானூர் பெரியகுளம் விவசாயிகள் சங்கத்தின் சார்பாக கலெக்டர் ஷில்பாவை நேரில் சந்தித்து விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். வீரகேரளம்புதூர் முதல் மானூர் வரையிலான கால்வாய் முழுவதையும் அகலப்படுத்தும்  பட்சத்தில் தங்களுடைய பிரச்சினை தீரும் என அவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டரின் ஆணையின் பேரில் இக்கால்வாய் அகலப்படுத்தும் பணி தொடங்கியது. இதனை கலெக்டர் ஷில்பா பார்வையிட்டார். வழியில் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் அவற்றை அகற்றுவதற்கான வழிமுறைகளையும் அவர் அதிகாரிகளுக்கு தெரிவித்தார். பொதுப்பணி துறைக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அகலப்படுத்தும் பணி நடந்து வரும் பகுதிகளுக்கு  நேரில் சென்று ஆய்வு செய்தார் அவருடன் வீரகேரளம்புதூர் தாசில்தார் ஹரிஹரன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் சுப்பிரமணிய பாண்டியன், தாலுகா தலைவர் பஷீர் அகமது, வருவாய் ஆய்வாளர் வானமாமலை, கிராம நிர்வாக அலுவலர் ஏஞ்சலா கௌரி பாத்திமா, கிராம உதவியாளர் அந்தோணி மற்றும் அதிகாரிகள், மானூர் பாசனப் பகுதி விவசாயிகள் சங்கத்தினர், அண்ணா பல்கலை கழகம் ஊரக வளர்ச்சி ஒருங்கிணைப்பாளரும் நம் தாமிரபரணி அமைப்பின் தொழிற்நுட்ப



ஆலோசகருமான

டாக்டர் சக்தி நாதன்

நம் தாமிரபரணி ஒருங்கிணைப்பாளர்கள் வித்யா சாகர்,

நல்ல பெருமாள்,கல்யாண ராமன், முகமது இப்ராஹிம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Previous Post Next Post