சங்ககால நெடுங்கல் கண்டுபிடிப்பு

 பழைய மற்றும் நுண்கற்காலத்தில் நாடோடி வாழ்க்கை மேற்கொண்டிருந்த பண்டைய தமிழ்ச் சமூகத்தினர் தம் இனக்குழுவில் இறந்தவர்களை இயற்கையாக அழியும் வண்ணம் அப்படியே விட்டுவிட்டனர். பின்பு வந்த புதிய கற்காலத்தில் தான் (கி.மு. 3000 முதல் 1000 வரை) தமக்கென நிலையான குடியிருப்புப் பகுதிகளை ஏற்படுத்திக் கொண்டு குழிவீடுகளிலும், வட்டம் மற்றும் 

நீள்வட்ட வடிவிலான புல் வேய்ந்த கூரைவீடுகளிலும் வாழத் தலைப்பட்டனர். இம்மக்கள் கால்நடை வளர்ப்பினிலும்  வேளாண்மையிலும் ஈடுபட்டனர். இம்மக்கள் தாம் விவசாயத்தில் நல்ல விளைச்சல் பெறுவதற்காக "வளமை வழிபாட்டையும் " 

தாய்த்தெய்வ வழிபாட்டையும் மேற்கொண்டனர். வேட்டையில் நிறைய விலங்குகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இவர்கள் புதிய கற்காலக் கருவிகளையும் நிலத்தில் நட்டு வழிபட்டார்கள். இப்புதிய கற்கால மக்கள் தான் முதன்முதலில் இறந்தவர்களைத் தம் வீடுகளுக்கு அருகில் குழி தோண்டி அடக்கம் செய்யும் முறையைத் தொடங்கித் தொடர்ந்து அவ்வாறு செய்து வந்தனர்.

 இதற்கு அடுத்து வந்த பெருங்கற்காலத்தில் தான்

 (கி.மு.1000 முதல் கி.பி. 100) வரை மக்கள் தம் குடியிருப்புகளுக்கு வெளியே சற்றுத் தொலைவில் தனியாக வேளாண்மை மற்றும் குடியிருப்புக்கு பயன்படாத ஓர் இடத்தை தேர்ந்தெடுத்து அங்கு இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறையை மேற்கொண்டனர். இவர்கள் இறந்தவர்களைப் புதைப்பதற்குப் பெருங்கற்களைப் பயன்படுத்திக் கல்லறைகளை ஏற்படுத்தியதால் இக்காலம் பெருங்கற்காலம் என்றே அழைக்கப்படுகிறது. இப்பண்பாட்டுக் காலத்திற்குரிய சில சிறப்பம்சங்கள் சங்க இலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன. எனவே இதன் இறுதிக் காலம் சங்க காலத்தோடு  தொடர்புடையதாகக் காணப்படுகிறது.

 இந்நிலையில் திருப்பூரில் இயங்கி வரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த மோ.சந்திரன், ரா.குமரவேல், ந.சுதாகர், க.பொன்னுச்சாமி, சு. வேலுச்சாமி மற்றும் 

முனைவர் சா.மு.ரமேஷ்குமார் ஆகியோர் மேற்கொண்ட 

கள ஆய்வின்போது கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்தில் பொள்ளாச்சியிலிருந்து கோவை செல்லும் பிரதான சாலையில் 5 கி.மீ தொலைவில் உள்ள ஆச்சிப்பட்டிப் பிரிவிலிருந்து கிழக்கே 1 கி.மீ தொலைவில் உள்ள குரும்பபாளையத்தில் 

சங்க காலத்தைச் சேர்ந்த நெடுங்கல் ஒன்றைக் கல் வட்டத்துடன் கண்டுபிடித்துள்ளனர். இதைப் பற்றி ஆய்வு மையத்தின் இயக்குனர் பொறியாளர் சு.ரவிக்குமார் மேலும் கூறியதாவது. உலகம் முழுவதும் உள்ள மக்களிடத்தில் இறப்புக்குப் பின்பும் தங்கள் ஆன்மா வாழும் என்ற நம்பிக்கை நிலவி வருகின்றது. இறந்த மாவீரர்களின் ஆன்மா என்றுமே தங்கள் இனக் குழுவிற்குப் பாதுகாப்பாக இயங்கும் என்றும் நம்புகின்றனர். தங்களுக்குத் துன்பம் ஏற்படும் போது இந்த ஆன்மாவை மகிழ்வித்தால் தங்களுக்கு நன்மை செய்யும் என்ற நம்பிக்கையில் அதற்கு வழிபாடும் படையலும் மேற்கொள்கின்றனர். பண்டைய காலத்தில் ஒரு இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் மற்றொரு இனக் குழு கூட்டத்தின் மீது அடிக்கடி தங்கள் மேலாண்மையை நிலைநாட்டவும், தங்கள் இனக்குழு மக்கள் வாழும் நிலப்பரப்பை விரிவுபடுத்தவும் , கால்நடைகளைக் கவர்வதற்க்காகவும் போர் தொடுத்தனர். இந்தப் போரில் வீர மரணம் எய்திய வீரனின்  நினைவாகவும் வீரத்தின் அடையாளமாகவும் சுமார் 10 முதல் 15 டன் எடை கொண்ட கற்களைப் பயன்படுத்தி இப்பெருங்கற்படைச் சின்னங்கள் உருவாக்கப்பட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது ஒரு சமுதாயமே முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு இருக்க வேண்டும் என்பது மிக நன்கு புலனாகிறது. இங்கு நமக்கு கிடைத்துள்ள நெடுங்கல்  14 அடி உயரமும், அதன் கீழ்ப்பகுதி 4 அடி அகலமும் கொண்டதாகும். இந்த நெடுங்கல்லுக்கு முன்பாக 20 அடிச் சுற்றளவும் 55 செ.மீ உயரமும் கொண்ட ஒரு கல்வட்டமும் காணப்படுகிறது. இந்த நெடுங்கல்லும், கல் வட்டமும் பண்டைய காலத்தில் அங்கு வாழ்ந்த இனக் குழுவின் தலைவனுக்காக ஏற்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். அகநானூறு குறிப்பிடும் (269) " நட்டபோலும் 

நடாஅ நெடுங்கல்" என்பது இதையே குறித்து நின்றது. "வில் இட வீழ்ந்தோர் பதுக்கை" (157) என்ற சொற்றொடர் தெளிவாக இறந்துபட்ட வீரர்களுக்குப் பதுக்கை எழுப்பப்பட்டதைக் காட்டுகின்றன. இதன் மூலம் தம் இனக்குழுவிற்காக இன்னுயிர் ஈந்த மாவீரர்களின் மேற் பண்டைய   மக்கள் மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்ததை நாம் அறியமுடிகிறது. மேலும் இங்கு கிடைக்கும் கருப்பு சிவப்பு வண்ணப் பானை ஓடுகள் மூலம் குரும்பபாளையம் கிராமம் 2300 ஆண்டுகளாக மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்விடமாகவும் அதன் சார்ந்த இடமாகவும் திகழ்வதை அறியமுடிகிறது என்றார் பொறியாளர் சு. ரவிக்குமார்.

Previous Post Next Post