எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் மற்றும் நிறுவனங்கள் உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு.!


2014-18-ஆண்டில் கோவை மாநகராட்சியில் ரூ.346.81 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை தமக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் அறப்போர் இயக்கம் மற்றும் தி.மு.க.வின் ஆர்.எஸ் பாரதி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு 2018ம் ஆண்டில் அனுப்பிய புகாரின் அடிப்படையில்  எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான 52 இடங்களில் இன்று (10 ஆகஸ்ட் 2021) லஞ்சஒழிப்புத்துறை போலீசார் ரெய்டு நடத்தினார்கள்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்கள் உள்பட 52 இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் மற்றும் நிறுவனங்கள் உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் காலையில் இருந்து ரெய்டு நடைபெற்று வரும் நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

கே.சி.பி. எஞ்சினியர்ஸ் பிரைவேட் லிமிட்டெட், ஆலயம் ஃபவுண்டேஷன்ஸ் லிமிட்டெட், காண்ஸ்ட்ரானிக்ஸ் இன்ஃப்ரா லிமிட்டெட், வைடூர்யா ஹோட்டல்ஸ்,ரத்னா லட்சுமி ஹோட்டல்ஸ், செந்தில் & கோ., KCP இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட்., இன்விக்டா மெடிடெக் லிமிடெட் (இப்போது கான்ஸ்ட்ரோனிக்ஸ் என பெயர் மாற்றப்பட்டுள்ளது) இன்ப்ரா லிமிடெட், ஆலயம் பவுண்டேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்., கான்ஸ்ட்ரோமல் கூட்ஸ் பிரைவேட் லிமிடெட்., ஏசிஇ டெக் மெஷினரி கூறுகள் இந்தியா பிரைவேட் லிமிடெட், ரத்னா லட்சுமி ஹோட்டல்கள் (பி) லிமிடெட், வைதூர்யா ஹோட்டல்ஸ் (பி) லிமிடெட், ஏஆர் இஎஸ் பிஇ இன்ஃப்ரா (பி) லிமிடெட், ஸ்ரீ மகாகணபதி ஜூவல்லர்ஸ் (பி) லிமிடெட், ஆலம் கோல்ட் & டயமண்ட் (பி) லிமிடெட், வர்தன் உள்கட்டமைப்பு., கான்ஸ்ட்ரானிக்ஸ் இந்தியா., மெட்ராஸ் இன்ஃப்ரா., ஓசூர் பில்டர்ஸ்., டூ லீஃப் மீடியா., எஸ்.பி. பில்டர்ஸ்.,சி.ஆர். கண்ட்ஸ்ரக்‌ஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

2014-18இல் கோவை மாநகராட்சியில் ரூ.346.81 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை தமக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை எம்எல்ஏ விடுதியில் உள்ள அறையில் எஸ்.பி.வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது. தனது நெருக்கமானவர்களுக்கு டெண்டர்களை ஒதுக்கியது குறித்தும், டெண்டர்கள் மூலம் முறைகேடு செய்து சொத்து குவித்தது குறித்தும் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

வேலுமணி உட்பட அவர் தொடர்புடைய 17 பேர் மீது நேற்று (09 ஆகஸ்ட் 2021)  லஞ்ச ஒழிப்பு எஸ்.பி.  கங்காதாரன் குற்றமுறையீடு செய்ததன் அடிப்படையில் புகார் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதையடுத்து வேலுமணிக்குச் சொந்தமாக கோவையில் உள்ள 35 இடங்களிலும் திண்டுக்கலில் உள்ள ஒரு இடத்திலும் சென்னையில் உள்ள 15 இடங்களிலும் மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு இடத்திலும் ரெய்டு நடத்தப்படுகிறது. 

‘வேலுமணி அதிமுக அமைச்சரவையின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் தன்னுடைய சகோதரரான அன்பரசன் மற்றும் அவர்கள் இயக்கும் நிறுவனங்களுக்கு நூற்றுக்கனக்கான கோடி ரூபாய் அளவில் டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரில் பல முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. வேலுமணி தனக்கும் தனக்குச் சார்ந்தவர்களுக்கும் ஆதாயம் தேடும் வகையில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்’ என அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post