ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி - இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி அக்டோபர் 24-ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது.!*



ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி அக்டோபர் 24-ஆம் தேதி துபாயில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் ஏற்கெனவே உலகக் கோப்பைக்கு தகுதிப் பெற்றுவிட்டன. 

மேலும் 4 அணிகள் தகுதிச் சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில் இறுதிப் பட்டியலில் இடம்பெறும். முதலில் இந்தப் போட்டிகள் இந்தியாவில் நடைபெற இருந்த சூழலில் கொரோனா பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்தத் தொடரில் சூப்பர் 12 மற்றும் முதல் சுற்று ஆட்டங்களில் விளையாட உள்ள அணிகளின் பட்டியலை ஏற்கெனவே வெளியிட்டது ஐசிசி. அதன்படி குரூப் 1 மற்றும் குரூப் 2 என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. குரூப் 1-இல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் உள்ளன.

குரூப் A தகுதி சுற்று வெற்றியாளரும், குரூப் B தகுதி சுற்றின் ரன்னரும் விளையாட உள்ளனர். குரூப் 2-வில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் உள்ளன. குரூப் B தகுதி சுற்று வெற்றியாளரும், குரூப் A தகுதி சுற்றின் ரன்னரும் விளையாட உள்ளனர். இப்போது ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது

Previous Post Next Post