தூத்துக்குடி மாவட்டத்தில் 60 சதவீதம் மானியத்துடன் சோலார் பம்ப் அமைப்பதற்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது - மாவட்ட ஆட்சியர் தகவல்.!


சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசால் 60மூ மானியத்துடன் சோலார் பம்ப் அமைப்பதற்கு விருப்ப விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு மின்வாரியத்தால் வழங்கப்பட்ட இலவச மின் இணைப்பு இருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் இலவச மின்சாரத்தை பயன்படுத்துவதோடு சூரிய ஒளி மின்சாரத்தையும் பயன்படுத்துவதால் மின்சாரம் சிக்கனம் ஆகிறது. மின் இணைப்பு எந்த வகையிலும் துண்டிக்கப்படமாட்டாது. மேலும், இலவச மின்சாரமும் ரத்து செய்யப்படமாட்டாது. 

இத்திட்டத்தின்கீழ் 7.5 HP வரை திறன் கொண்ட விவசாய பம்ப்களுக்கு நாளொன்றுக்கு 55 யூனிட் வரை உற்பத்தி செய்யலாம்.

இத்திட்டத்தில் விவசாயிகள் சூரிய ஒளி மின்சாரம் உபயோகப்படுத்தியது போக மீதமுள்ள சூரியஒளி மின்சாரமானது தமிழ்நாடு மின்சார வாரிய மின் கட்டமைப்புக்கு விற்பனை செய்யவும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். அதன்மூலம் ஆண்டிற்கு ரூ.40,000/- வரை வருமானம் பெறலாம்.

மேலும், விவசாயிகள் தங்கள் நிலத்தில் 1100 சதுர அடி நிலத்தினை ஒதுக்கீடு செய்து, அந்த இடத்தில் சூரியஒளி தகடுகளை அமைக்கவேண்டும். ஆதற்கான மொத்த திட்ட செலவினம் ரூ.5,00,000/-ல் 60 சதவீதமான ரூ.3,00,000/- ஐ மத்திய, மாநில அரசுகளின் மானியமாக பெறலாம். 

மீதமுள்ள ரூ.2,00,000/- விவசாயிகளின் பங்களிப்பு தொகையாகும். இந்த தொகையினை முன்னோடி வங்கியின் மூலம் குறைந்த வட்டியில் விவசாய கடனாகவும் பெற அரசு ஏற்பாடு செய்யும்.

இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர் விருப்ப விண்ணப்ப படிவத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் வழங்கி பயன்பெறலாம். மேலும், 9385290540 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்  என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், தெரிவித்துள்ளார். 

Previous Post Next Post