பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் நிர்மலா வெட்டிக் கொலை- தலை துண்டிப்பு!

திண்டுக்கல்: தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவரான பசுபதி பாண்டியன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய பெண் நிர்மலா தேவி இன்று திண்டுக்கல் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். நிர்மலா தேவியின் தலையை துண்டித்து பசுபதி பாண்டியன் வீடு முன்பு கொலையாளிகள் வீசிச் சென்றதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.

2012-ம் ஆண்டு ஜனவரி 10-ந் தேதி திண்டுக்கல் பழைய கரூர் சாலையில் நந்தவனப்பட்டியில் பசுபதி பாண்டியன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை தொடர்பாக தூத்துக்குடி மூலக்கரையை சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உட்பட 18 பேர் மீது தாடிக்கொம்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கில் 3 பேர் உயிரிழந்தும் விட்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடையவர்தான் நந்தவனப்பட்டி நிர்மலா தேவி. சுபாஷ் பண்ணையார், நிர்மலா தேவி உள்ளிட்ட 15 பேர் மீது திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றும் வருகிறது. நந்தவனப்பட்டியில் பசுபதி பாண்டியன் பற்றி பண்ணையார் கோஷ்டிக்கு துப்பு கொடுத்தவர் நிர்மலா தேவி என்கிறது போலீஸ் தரப்பு.

இந்நிலையில் இன்று காலையில் திண்டுக்கல்- திருச்சி பைபாஸ் சாலையில் செட்டிநாயக்கன்பட்டி இபி காலனி, டேவிட் நகர் அருகே 100 நாள் வேலைத் திட்டத்துக்காக பெண்கள் காத்துக் கொண்டிருந்த இடத்தில் நிர்மலாவும் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் நிர்மலாவை சரமாரியாக வெட்டினர். இதில் நிர்மலா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் நிர்மலாவின் தலையை துண்டித்து நந்தவனப்பட்டியில் உள்ள பசுபதி பாண்டியன் வீட்டு முன்பாக அந்த நபர்கள் வைத்துவிட்டுச் சென்றனர். 

போலீஸ் விசாரணை இத்தகவல் அறிந்த தாடிக்கொம்பு போலீசார் விரைந்து வந்து நிர்மலா தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். மேலும் நிர்மலாதேவியின் தலையையும் எடுத்துச் சென்றனர்.

பழிக்கு பழி 

பசுபதி பாண்டியன் கொலைக்கு பழிக்கு பழிதிண்டுக்கல்லில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல்,தேனி சரக துணைத் தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். பசுபதி பாண்டியன் கொலைக்கு பழிக்குப்பழி ஆகவே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மீரான் பாய் சில நாட்களுக்கு முன்னர் கொலை திண்டுக்கல் நகரில் சில நாட்களுக்கு முன்னர் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வந்த மீரான்பாய் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டார். திண்டுக்கல் சட்டாம்பிள்ளை தெருவில் அரிவாள், கத்தியுடன் வந்த மர்ம நபர்கள் மீரான் பாயை பொதுமக்கள் முன்னிலையிலேயே சாவகாசமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இது தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருந்தன. இந்த சம்பவம் நிகழ்ந்த சில நாட்களுக்குள்ளேயே நந்தவனப்பட்டி நிர்மலா பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post