வெங்கடேஷ் பண்ணையார் நினைவிடத்திற்கு உறவினர்கள் மட்டுமே செல்ல அனுமதி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் தகவல்.!


செப்டம்பர் 26ம் தேதி வெங்கடேஷ் பண்ணையார் 18 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று (21.09.2021) ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் திருச்செந்தூர் காவல் உதவி கண்காணிப்பாளர் திரு. ஹர்ஷ் சிங் இ.கா.ப அவர்கள் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழுவதும் தளர்வுகளுடன் கூடிய 144 தடைஉத்தரவு  31.10.2021 வரை நீட்டிப்பு செய்யப்பட்டு அமலில் உள்ளதால் வரும் செப்டம்பர் 26ம் தேதி நடைபெற உள்ள வெங்கடேஷ் பண்ணையார் 18ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பொதுமக்கள் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன  ஊர்வலத்திற்கோ, 

ரத ஊர்வலத்திற்கோ மற்றும் எவ்வித ஊர்வலத்திற்கோ அனுமதி கிடையாது. மேலும் பால்குடம் எடுத்து செல்வதற்கோ, அன்னதானத்திற்கோ எவ்வித அனுமதியும் இல்லை. நீதிமன்ற உத்தரவு பிரகாரம் டிஜிட்டல் பேனர்கள் எதுவும் வைக்க அனுமதியில்லை என்றும்,

அதே போன்று போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தாமல் நடந்திட வேண்டும் எனவும், ஜாதி ரீதியாக சட்டை அணியவோ, பிற ஜாதியினரை புண்படும்படி வாசகங்களை பயன்படுத்தி கோஷம் எழுப்பக்கூடாது எனவும், அம்மன்புரத்தில் வெங்கடேஷ் பண்ணையார் குடும்பத்தினரை தவிர வேறு யாரும் அவரது நினைவிடத்திற்கு செல்வதற்கு அனுமதி கிடையாது என்றும், 

மேலும் வெளி மாவட்டங்களிலிருந்து யாரும் வருவதற்கு அனுமதியில்லை அதற்காக பாதுகாப்பு பணியில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 10 காவல் துணை கண்காணிப்பாளர்கள் உட்பட 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று  தெரிவித்துள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில்  ஊர் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் ஆத்தூர் காவல் ஆய்வாளர்  ஐயப்பன், ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்,  உதவி ஆய்வாளர்கள் சதீஷ் நாராயணன், உட்பட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post