தமிழகத்தில் உரத் தட்டுப்பாட்டை நீக்க 27 ஆயிரம் டன் உரம் இறக்குமதி - துறைமுக குடோனில் ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு.!


வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியதை தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் விவசாயிகள் தங்கள் விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் நிலவும் உரம் தட்டுப்பாட்டை நீக்க  முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து, 

தமிழகத்தில் நிலவும் உரத்தட்டுபாட்டை போக்க,  இஸ்ரேல் நாட்டில் இருந்து சுமார் 27 ஆயிரம் டன் பொட்டாஷ் உரம் கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வந்து இறக்குமதி செய்திட முதல்வர் உத்தரவிட்டிருந்தார். 

அதன்படி இஸ்ரேல் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட 27 ஆயிரம் டன் உரம்  தூத்துக்குடி துறைமுக குடோனில் இன்று இறக்குமதி செய்யப்பட்டது. இதனை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இந்த பொட்டாஷ் உரம் 50 கிலோ மூடைகளாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சாலை வழியாக அனுப்பும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தொடர்ந்து அணைத்து இடங்களிலும் உரம் தட்டுபாடு இல்லாமல் கிடைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

உரத்தை மூடைகளில் அடைக்கும் பணிகளில்  சுமார் 400 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உரம் இறக்குமதி செய்யப்பட்டதன் மூலமாக தற்போது நிலவும் உர தட்டுப்பாடு மெல்ல மெல்ல சரிசெய்யப்படும் என்றார்.

ஆய்வின்போது தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் முகைதீன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்

Previous Post Next Post