விளாத்திகுளத்தில் 8 மாதங்களுக்கு முன்பு இறந்து போனவருக்கு 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தியதாக வந்த குறுஞ்செய்தியால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தை அடுத்த வில்வமரத்துப்பட்டியை சேர்ந்தவர் ராஜப்பா(72). கடந்த ஏப்ரல் 13ல் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய நிலையில், கடந்த ஆண்டு மே 20ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இந்நிலையில் நேற்று (ஜன.,18) ராஜப்பா பயன்படுத்திய மொபைல் போனுக்கு 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தியதாக குறுஞ்செய்தி வந்ததை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். கொரோனாவால் இறந்தவருக்கு 2வது டோஸ்
தடுப்பூசி செலுத்தி கொண்டதாக வந்த குறுஞ்செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. இது குறித்து சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து,
கம்ப்யூட்டரில் ஏற்பட்ட பிழையே இந்த குளறுபடிக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறி உள்ளனர்.