தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை தமிழக அரசு செயலாளர் சிவதாஸ் மீனா நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் 100 கோடி மதிப்பில் பழைய பேருந்து நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் கான்கிரீட் தரத்திலான பல்வேறு சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
பல இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகின்றன மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதும் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு நேரடியாக வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து பணிகள் நடைபெற்று வந்த நிலையில் மழையின் காரணமாக பணிகளில் தொய்வு ஏற்பட்டது. மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன நிலையில் தற்போது இந்த பணிகளை விரைவு படுத்துவதற்காக தமிழக அரசின் நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு செயலாளர் சிவதாஸ் மீனா, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆகியோர் இன்று மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சில பணிகளில் தாமதத்திற்கான காரணங்களை கேட்டரிந்த அவர்கள் அந்த பணிகளை விரைவுபடுத்த உத்தரவுகளை பிறப்பித்தனர்.
ஆய்வின்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.