புலிகள் காப்பக பகுதியில் போக்குவரத்திற்கு தடை செய்வதை கண்டித்து மூன்று மாநிலங்களில் ஆர்ப்பாட்டம். புலிகள் காப்பக மக்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பு முடிவு.


புலிகள் காப்பக மக்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஆலோசனைக்கூட்டம்,இன்று சத்தியமங்கலம், இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. 

கூட்டத்தில், கூடலூர்,பந்திப்பூர், சுல்த்தான் பத்தேரி,முத்தங்கா,குண்டல்பேட்டை,தாளவாடி,ஆசனூர்,கடம்பூர்,சத்தியமங்கலம்,தெங்கு மரஹாடா,உதகை,மசினகுடி, கண்ணியாகுமரி ஆகிய புலிகள் காப்பக பகுதிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


வன உரிமைச் செயல் பாட்டாளர் சி.ஆர்.பிஜாய்,உயர் நீதி மன்ற வழக்கறிஞர் கீதா,நீலகிரி எம்.எஸ்.செல்வராஜ்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம்,திம்பம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் யுவ பாரத், தாளவாடி விவசாயிகள் சங்க நிர்வாகி கண்ணையன், முத்தங்கா வனப்பகுதியிலிருந்து கீதானந்தன்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பின் வரும் முடிவு மேற்கொள்ளப்பட்டது:

♦"வன உரிமைச் சட்டத்திற்கும்,வன விலங்கு பாதுகாப்புச் சட்ட      திருத்தத்திற்கும், விரோதமான புலிகள் காப்பக நடவடிக்கைகளை கண்டித்தும்..

♦புலிகள் காப்பக பகுதிகளில் போக்குவரத்திற்கு தடை விதிப்பதை கைவிடக்கோரியும்...

♦ஒன்றிய அரசின் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம்,(NTCA) மாநில அரசின் உரிமைகளுக்கு விரோதமாக நடப்பதை கண்டித்தும்,

வரும் மார்ச் மாதம் 16 ம் நாள்,பெங்களூரு-கோழிக்கோடு தேசிய நெடுஞ்சாலையிலுள்ள கூடலூர், மசினகுடி ,சுல்த்தான் பத்தேரி (கேரளம்), குண்டல்பேட்டை (கர்நாடகம்), பெங்களூரு-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சாம்ராஜ்நகர் (கர்நாடகம்), தாளவாடி, ஆசனூர், சத்தியமங்கலம், மற்றும் கன்னியாகுமரி, பர்கூர்,திருநெல்வேலி ஆகிய மையங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. 

கூட்டத்தில் நீலகிரி எம்.எஸ்.செல்வராஜ் எழுதிய 'வன உரிமை அங்கீகார சட்டம்' குறித்த நூலை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் கீதா அவர்கள் வெளியிட,பி .எல்.சுந்தரம் பெற்றுக்கொண்டார்.

Previous Post Next Post