நூல் விலை உயர்வு : திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டம்.!- 400 கோடி ரூபாய் வரை வர்த்தக இழப்பு ஏற்படும் அபாயம்.!

 

நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர், கோவை, கரூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பின்னலாடை தொழில் அமைப்புகள் பின்னலாடை நிறுவனங்களின் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் திருப்பூரில் தொடங்கியது!

கடந்த சில மாதங்களாக நூல் விலை அபரிதமாக உயர்ந்து வரக்கூடிய சூழ்நிலையில் இம்மாதம் கிலோ 40 ரூபாய் வரை விலை உயர்ந்து 470 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரலாறு காணாத வகையில் பஞ்சு விலையும் உயர்ந்து இருப்பதன் காரணமாக இனி வரும் மாதங்களில் நூல் விலை மீண்டும் உயரும் அபாயம் இருப்பதாகவும் உடனடியாக மத்திய அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் பருத்தி பதுக்கலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதியை ரத்து செய்து உள்நாட்டு உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டும், நூல் இறக்குமதிக்கான வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே 16 மற்றும் 17 ஆகிய இரு நாட்கள் திருப்பூரைச் சேர்ந்த பின்னலாடை தொழில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதனை ஏற்று கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பின்னலாடை தொழில் அமைப்புகள் ஆதரவு தெரிவித்ததை அடுத்து இன்று மற்றும் நாளை மறுதினம் பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் இந்த பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

 இதையொட்டி திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள்  சார்ந்த தொழில் நிறுவனங்கள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. பனியன் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் உள்பட 10 சங்கங்களும் தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பஞ்சு மற்றும் பருத்தி பதுக்கலை தடை செய்ய  வேண்டும்., நூலுக்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் உற்பத்தியாளர்களும 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பனியன் தொழிலாளர்களும் பங்கேற்றுள்ளார்கள். 

வேலை நிறுத்தம் காரணமாக திருப்பூர் மாநகரம் வெறிச்சோடி காணப்படுகிறது.

இதன் காரணமாக இரண்டு நாட்களும் சேர்ந்து 400 கோடி ரூபாய் முதல் 500 கோடி  வரை வர்த்தக இழப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி நாளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் ஆர்ப்பாட்டமும், 17ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.

#Tirupur | #Strike .

Ahamed

Senior Journalist

Previous Post Next Post