உத்தரபிரதேசம்: மாட்டுக்கறி தடையால் பராமரிக்க முடியாமல் மாடுகளை கைவிடும் விவசாயிகள் - விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்படும் என அமைச்சர் எச்சரிக்கை.!

லக்னோ: பால் உற்பத்தி செய்யாத மற்றும் வயதான பராமரிக்க முடியாத கால்நடைகளை கைவிடும் விவசாயிகள் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்படும் என உத்தரப் பிரதேச அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் தரம்பால் சிங் கூறுகையில், "கசாயிக்கும் கிசானுக்கும் (கசாப்புக் கடைக்காரர் மற்றும் விவசாயி) வித்தியாசம் உள்ளது. விவசாயியை நாங்கள் பராமரிப்போம், கசாப்புக் கடைக்காரனை அல்ல" என்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் தரம்பால் சிங் கூறினார்.

உத்தரபிரதேச சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ அவதேஷ் பிரசாத் தெருக் கால்நடைகளின் அச்சுறுத்தலைத் தடுக்க அரசாங்கத்தின் திட்டத்தை அறியவும், அவற்றால் கொல்லப்படும் நபர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்த கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

மேலும் அவர் "இந்த கால்நடைகள் பராமரிக்க முடியாமல் விடுவிக்கப்பட்டவை. இவற்றை விடுவித்தது யார் என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு பசு பால் கொடுக்கும்போது, அது பராமரிக்கப்படுகிறது, அது பால் கொடுப்பதை நிறுத்தினால் தெருவில் விடப்படுகின்றது. பராமரிக்க முடியாத கால்நடைகளை கைவிடும் விவசாயிகள் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

மேலும் மே 15 ஆம் தேதி வரை, மாநிலத்தின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் 6,187 பசுக் காப்பகங்கள் உருவாக்கப்பட்டதாகவும், 8,38,015 கால்நடைகள் அங்கு பராமரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post